ஜெயலலிதாவை ராமதாஸ் சந்திக்காதது ஏன்?
சேலம்: வாய்ப்பு வரும்போது ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசுவேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பனை, தென்னை விவசாயிகள் கள் இறக்க அனுமதிகோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் வாயில்லா பூச்சிகள். பூரண மதுவிலக்கை கொண்டுவர சொல்லும் பாமக, பனை- தென்னை விவசாயிகளின் நிலையில் என்ன முடிவெடுக்கப் போகிறது என நீங்கள் கேட்கலாம்.
அவர்கள் கள் இறக்குவதற்கு பதிலாக பதநீர் இறக்க அனுமதி வழங்கலாம். ஆவின்' பால் நிறுவனம் போல, பதநீருக்காக பாவின்' என்ற ஒன்றை உருவாக்கலாம். பதநீரை அரசே கொள்முதல் செய்யலாம்.
கோகோ, பெப்சி என வெளிநாட்டு குளிர்பானம் விற்க அனுமதிப்பதுபோல, பதநீரை பள்ளி-கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் விற்க நடவடிக்கை எடுக்கலாம்.
எப்படி மது விற்பனைக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதோ அதுபோல பதநீர் விற்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கலாம். இதனால் பனை, தென்னை விவசாயிகள் மட்டுமின்றி படித்த இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சென்னையில் இன்று இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த கருத்தரங்க கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த கருத்தரங்கத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசி முடிவெடுக்கப்படும்.
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சாவுக்கு இந்திய அரசும், அதற்கு துணைபோன தமிழக அரசும் தான் காரணம் என்றார்.
பின்னர் அவரிடம் தேர்தலுக்குப் பின் உங்கள் கூட்டணி கட்சித் தலைவியான ஜெயலலிதாவை நீங்கள் சந்திக்கவே இல்லையே என்று கேட்டதற்கு,
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஜெயலலிதாவுடன் தொலைபேசியிலேயே பேசிவிட்டேன். வாய்ப்பு வரும்போது நேரில் சந்தித்து பேசுவோம் என்றார்.
ராமதாஸை ஜெயலலிதா சந்திக்க மறுத்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு பதில் தந்துள்ளார்.












Click it and Unblock the Notifications