ஏர் பிரான்ஸ் விமான விபத்து - இதுவரை 41 உடல்கள் மீட்பு
ரியோ டி ஜெனீரோ/பாரீஸ்: ஏர் பிரான்ஸ் விமானம் விபத்துக்குள்ளான அட்லான்டிக் கடல் பகுதியிலிருந்து மேலும் 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து இதுவரை 41 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரியோ டி ஜெனீரோ நகரிலிருந்து 228 பேருடன் பாரீஸ் கிளம்பிய ஏர் பிரான்ஸ் விமானம் கடந்த வாரம் அட்லான்டிக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென மாயமானது.
இதையடுத்து தீவிர தேடுதல் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் அட்லான்டிக் கடல் பகுதியில் விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு விரைந்த மீட்புக் கப்பல்கள் பயணிகளின் உடல்களை மீட்டு வருகின்றன. விமான பாகங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கருப்புப் பெட்டியைத் தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதுவரை அந்த இடத்திலிருந்து 41 உடல்கள் கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளன.
அட்லான்டிக் கடல் பகுதியில் அடிக்கடி புயல் வீசி வருவதாலும், கால நிலை மோசமாக இருப்பதாலும் மீட்புப் பணிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றன.
இருப்பினும் பிரேசில் ராணுவம், கடற்படை ஆகியவை தொடர்ந்து உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
மீட்கப்பட்ட உடல்கள் விபத்து நடந்த கடல் பகுதிக்கு அருகில் உள்ள பெர்னான்டோ டி நொரோன்ஹா பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கிருந்து அவை பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
மீட்கப்பட்டு வரும் உடல்களை பிரான்ஸ் மற்றும் பிரேசில் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து பயணிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே செனகல் நாட்டின் எல்லைப் பகுதிக்குள் வரும் செயின்ட் பால், செயின்ட் பீட்டர் ராக்ஸ் ஆகிய திட்டுப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டையை நடத்த பிரேசில் முடிவு செய்துள்ளது.
இதற்காக அப்பகுதியில் தங்களது விமானப்படை மற்றும் கப்பல் படையை அனுமதிக்குமாறு அது செனகலுக்கு கோரிக்கை விடுத்தது. அதை செனகலும் ஏற்றுக் கொண்டது.
நீரோட்டத்தின் காரணமாக இப்பகுதிக்கு உடல்களும், விமான பாகங்களும் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என பிரேசில் சந்தேகிக்கிறது.












Click it and Unblock the Notifications