ஆஸி.யை தொடர்ந்து கனடாவிலும் இந்தியர் மீது தாக்குதல்
வான்கூவர்: ஆஸ்திரேலியாவை தொடர்ந்து தற்போது கனடாவிலும் இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கனடா போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படிக்க சென்றுள்ள இந்திய மாணவர்களின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து, தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் கனடாவின் வான்கூவர் நகரில் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த 6 இந்திய வீரர்கள் மீது கனடாவை சேர்ந்த நான்கு பேர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வான்கூவருக்கு அருகில் இருக்கும் அப்போட்ஸ்போர்டு என்னும் பகுதியில் இந்த ஆறு இந்தியர்களும் வசிக்கிறார்கள். அப்பகுதி மக்கள் தொகையில் 25 சதவீதத்துக்கு அதிகமானோர் சீக்கியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வான்கூவர் போலீசார் கூறுகையில், கனடாவை சேர்ந்து மூன்று வாலிபர்களும், 1 பெண்ணும் டென்னிஸ் விளையாடி கொண்டிருந்த இந்தியர்களை நோக்கி இனவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ளனர்.
அந்த நான்கு பேரும் டென்னிஸ் மைதானத்தை சுற்றி போடப்பட்டிருந்த வேலியை தாண்டி சென்று அந்த ஆறு இந்தியர்களையும் மிரட்டியுள்ளனர். அப்போது ஒருவன் வேலி பலகையை தூக்கி போட்டதில் ஒரு இந்தியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நான்கு பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்தோம். அவர்களில் 19 வயதான ரோட்னி மெர்சியகா என்பவரை மட்டும் காவலில் வைத்துள்ளோம்.
லெஸ்லே ரோத்வெல் என்ற பெண் (17), 15 மற்றும் 16 வயதான இரண்டு சிறுவர்களும் மைனராக இருப்பதால் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். அவர்களை வரும் 12ம் தேதி நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications