ஜெட் வேகத்தில் உயரும் நேந்தரம் பழம் விலை
மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் மார்க்கெட்டில் நேந்தரம் பழம் வரலாறு காணாத விதத்தில் விலை உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்த்தாண்டம் மார்க்கெட் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் கூடுகிறது. இந்த மார்க்கெட் பழவகைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு நேந்தரம்பழம், செந்துழுவன், குமரிக்கு பெருமை சேர்க்கும் மட்டி, நெய்கதழி, வெள்ளை துழுவன், மோரிஸ் போன்ற அனைத்து பழ வகைகளும் கிடைக்கும்.
மலையோர கிராமமங்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது திருமண சீசன் என்பதால் பழங்களுக்கு கடுமையான கிராக்கி உள்ளது. வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது.
கடந்து சுமார் 3 மாதமாக செந்துழுவன், நேந்தரம் பழம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 100 செந்துழுவன் பழம் ரூ. 400 முதல் 600 வரை விற்பனையாகிறது. இதே போல் தரமான 100 ஏத்தன் பழம் ரூ. 450 முதல் 650 வரை விற்பனையாகிறது.
பொதுவாக செந்துழுவன் பழத்தின் விலையே அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது செந்துழுவன் பழத்தின் விலையை விட நேந்தரம் பழத்தின் விலை அதிகமாக உள்ளது. இந்த பழம் வெளிமாவட்டம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலை ஏறியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.