33% மகளிர் இட ஒதுக்கீடு குறைக்கப்படாது-அரசு
டெல்லி: மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற அளவைக் குறைக்கும் எண்ணமே அரசிடம் இல்லை. 33 சதவீதம் என்ற அளவில் அரசு உறுதியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக வட இந்திய கட்சிகள்தான் இதை கடுமையாக எதிர்க்கின்றன. இதில் மாற்றம் செய்யாமல் நிறைவேற்ற முயலக் கூடாது என அவை திட்டவட்டமாக கூறியுள்ளன.
இதனால் இட ஒதுக்கீட்டை அளவை 20 சதவீதமாக குறைத்து மசோதாவை நிறைவேற்றி விட மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற அளவில் எந்தவித மாற்றமும் இல்லை.
மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் நீக்குப் போக்கு, நீர்த்துப் போகச் செய்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதெல்லாம் ஊகமான செய்திகள்.
இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்துத் தரப்புடனும் பேசி ஒருமித்த கருத்தை எட்ட அரசு முயற்சிக்கும்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகையில், இந்த அரசின் முதல் முன்னுரிமைத் திட்டத்தில் மகளிர் மசோதாவும் ஒன்று குறிப்பிட்டார்.
தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு உள்ளது. விரைவில் இந்தக் குழு மாற்றியமைக்கப்படவுள்ளது. அதன் அறிக்கைக்காக அரசு தற்போது காத்திருக்கிறது என்றார் பன்சால்.
33 சதவீதம் என்பதில் மாற்றம் இல்லை - சோனியா
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கூட 33 சதவீதம் என்ற அளவை 20 சதவீதமாக குறைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதை குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.
இந்த விவகாரத்தி்ல் இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படாதது கவலை தருகிறது. இருப்பினும் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்று இந்த மசோதாவை நிறைவேற்ற அரசும், காங்கிரஸ் கட்சியும் உறுதியாக உள்ளன.
பெண்கள் உயர்வு பெறுவதை விரும்பாத சில சக்திகள்தான் (முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ்) இந்த மசோதா குறித்து அவதூறான கருத்தைக் கூறி வருகின்றன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதை விரும்பாதவர்கள்தான், உள் ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுகிறார்கள்.












Click it and Unblock the Notifications