புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்பை உடைக்க இலங்கை முயற்சி
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் கூட வெளிநாடுகளில் அவர்களுக்கான ஆதரவுக் கட்டமைப்பு கொஞ்சம் கூட சிதறாமல் அப்படியே வலுவாக, இன்னும் சொல்லப் போனால், முன்பை விட மேலும் வலுவாக இருப்பதால் இலங்கை அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதை உடைக்க தற்போது முயற்சிகளில் இறங்கியுள்ளது. புலிகள் ஆதரவு அதிகம் காணப்படும் நாடுகளுடன் பேசி இந்த கட்டமைப்பை சீர்குலைக்க அது முயன்று வருகிறதாம்.
வடக்கில் நடந்து முடிந்துள்ள சண்டையின்போது விடுதலைப் புலிகளின் அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள், கம்ப்யூட்டர் கோப்புகள் உள்ளிட்டவற்றை இலங்கை அரசு ஆராய்ந்து வருகிறது.
எங்கெங்கிருந்து புலிகளுக்கு ஆயுதம், பணம் உள்ளிட்டவை வந்தது என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஆயுதம், பணம் உள்ளிட்டவற்றை அனுப்பி வந்த சப்ளை குழு தற்போது எங்கு இருக்கிறது என்பது குறித்து உறுதியான தகவல்கள் இலங்கை அரசு வசம் இல்லையாம்.
அதேசமயம், புலம் பெயர்ந்த தமிழர்கள், தற்போது புலிகள் அமைப்பின் நோக்கத்தை தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளதாக இலங்கை அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் சிலர் தற்போது முக்கியப் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு செயல்படுவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இவை அனைத்தையும் உலக நாடுகள் முன்பு வைத்து புலிகளுக்கு ஆதரவானவர்களை கட்டுப்படுத்தவோ அல்லது நடவடிக்கை எடுக்கவோ இலங்கை அரசு வற்புறுத்தப் போகிறதாம்.
புலிகள் நடத்தி வந்த 30 ஆண்டு கால தீவிரப் போருக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் பெரும் உதவியாக இருந்து வந்தனர். பணம், ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆதரவை அவர்கள் தந்து வந்ததால்தான் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் ஆயுத, நிதி மற்றும் தொழில்நுட்பப் பலத்தைப் பெற்று அதன் மூலமாக புலிகள் இயக்கத்தை இலங்கையி்ல் தோற்கடித்துள்ளது இலங்கை அரசு.
தற்போது உலக அளவிலும் புலிகள் அமைப்பின் கட்டமைப்பை சீர்குலைக்க அது முயன்று வருகிறது.
இதற்கிடையே, புலிகள் அமைப்பின் நிதிக் கட்டமைப்பை புரிந்து கொள்வது மிகக் கடினமாக உள்ளதாக சிட்னியில் உள்ள மாக்குவாரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சங்கர ஜெயசேகரா கூறியுள்ளார். புலிகள் அமைப்பின் நிதிக் கட்டமைப்பு யாருக்கும் எளிதில் புரியாத வகையில் உள்ளது. எனவே இலங்கை அரசின் முயற்சிகள் சற்று கடினமாகவே இருக்கும் என்கிறார்.