ஆட்சியில் பங்கு-தங்கபாலு தலைமையில் காங். அவசர ஆலோசனை
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது.
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு என்றுமே பஞ்சம் கிடையாது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு கோஷ்டி சொல்வதை மற்ற கோஷ்டி கேட்காது. இப்படி தங்களுக்குள்ளே மாற்றி மாற்றி சண்டை போடும் தமிழக காங்கிரசார்கள் ஒற்றுமையுடன் எடுத்த முடிவு தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது என்பது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இது குறித்து திமுகவிடம் காங்கிரசார்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்தப்போவதகாக தெரிவித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
தற்போது காங்கிரசார் மீண்டும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்க இருக்கின்றனர். இதற்காக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்க்ளின் அவசர கூட்டம் நேற்று காலை சுமார் 11 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, ஞானசேகரன், காயத்ரி தேவி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராகுல் காந்தியுடன் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வேளை ஆட்சியில் பங்களிக்க திமுக மறுத்தவிட்டால் அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் விமர்சிக்கும் என கூறப்படுகிறது.