தோல்வி எதிரொலி-கட்சியை பலப்படுத்த பாமக, மதிமுக தீவிரம்

இந்த இரு கட்சிகளும் அடிமட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தும் வேலைகளைத் துவக்கவுள்ளன. இதற்காக பாமக சார்பில் அன்புமணியும், மதிமுக சார்பில் பொது செயலாளர் வைகோவும் களத்தில் குதித்துள்ளனர்.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதையடுத்து கடந்த பல தேர்தல்களாக தமிழகத்தில் சில எம்.பி தொகுதிகளை பெற்று அதன் மூலம் மத்தியில் அமைச்சரைவயில் இடம்பிடித்து வந்த பாமகவு்ககு பலத்த அடி விழுந்தது.
தங்களுக்கு இருப்பதாக சொல்லப்பட்ட வாக்கு வங்கி திடீரென காணாமல் போனதில் பாமக அதிர்ந்துவிட்டது.
இந்நிலையில் பாமகவுக்கு அடிமட்டத்தில் இருந்து மீண்டும் புத்துயிர் கொடுக்கும் வேலையை முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
400 நாட்கள் சுற்றுப்பயணம்...
இதற்காக முதல் கட்டமாக பாமக வலுவாக இருந்த பகுதிகளில் 400 நாட்கள் சுற்றுப் பயணத்துக்கு அன்புமணி திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து அவர் ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில்,
பாமகவை சீரமைக்க மிகப்பெரிய திட்டத்துக்கு தயாராகி வருகிறோம். நான் 400 நாட்கள் 100 சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். ஒவ்வொரு சட்டசபையிலும் உள்ள 200 கிராமங்களுக்கும் நேரில் சென்று தங்கி ஆதரவு திரட்டுவேன்.
கடந்த 5 ஆண்டுகளாக சுகாதார துறை அமைச்சராக டெல்லியில் இருந்துவிட்டதால் இங்கு அதிக பணிகளை செய்ய முடியவில்லை.
அதிமுக கூட்டணி சுமூகமாக செல்கிறது. எந்த பிரச்சனையும் இல்லை. கட்சி தலைவர் தேர்தலுக்கு பின் ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசினார். நானும் அதிமுக தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பு வைத்துள்ளேன். கொடநாடு சென்றிருக்கும் ஜெயலலிதா வந்தவுடன் அவரை சந்தித்து ஆலோசிக்க இருக்கிறோம்.
தேர்தல் முடிவுகள் வெளியான முதல் 20 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. ஆனால் தற்போது பாமக தொண்டர்கள் உற்சாகமாக வேலை பார்த்து வருகின்றனர். தலைவர் ராமதாஸ் தொகுதிவாரியாக சுற்றுபயணம் மேற்கொண்டு, பொதுக்குழு உறுப்பினர்களுடன் பேசி வருகிறார்.
பாமகவின் உள்கட்சி தேர்தலை வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடந்து முடிவு செய்துள்ளோம். இந்த தேர்தல்கள் எந்த தலையீடும் இல்லாமல் சுமூகமாக நடக்கும். இதன் மூலம் மக்களிடம் உண்மையான ஆதரவு பெற்றவர்கள் கட்சி நிர்வாகப் பணிகளுக்கு கொண்டு வரப்படுவர் என்று கூறியுள்ளார் அன்புமணி.
இதன்மூலம் மக்கள் ஆதரவு இல்லாத, தங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களை நிர்வாகிகளாக்கியதன் பலனை பாமக தலைமை தெளிவாக உணர்ந்துவிட்டது தெரிகிறது.
வைகோவின் திட்டம்...
பாமக தற்போது புதிய திட்டத்தை தயாரித்து வரும் நிலையில் மதிமுக ஒரு படி மேலே சென்று அதற்கான பணிகளை வெகு ஜோராக செய்து வருகிறது.
இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நான்கில் ஒன்றில் வென்ற போதும் பாமகவை விட அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி மதிமுக என்பது தான் காரணம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கட்சியின் பொது செயலாளர் வைகோ, விருதுநகரில் படுதோல்வியடைந்தார்.
மேலும் அக்கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் தேர்தல் நேரத்தில் திடீரென்று திமுகவில் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, அதிர்ச்சி அளித்தனர். இதையடுத்து மதிமுகவுக்கு சில தொகுதிகளில் பெயர் சொல்வதற்கு கூட ஆளில்லாத நிலைமை உருவானது.
இதையடுத்து கட்சியின் உறுப்பினர்களை முதலில் அதிகரிக்க வேண்டும் என மதிமுக தலைமையகமான தாயகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்து.
இதை தொடர்ந்து வைகோ தலைமையில் நாஞ்சில் சம்பத், நாசரேத் துரை, மல்லை சத்யா, துரை பாலகிருஷ்ணன், மாசிலாமணி, திருப்பூர் துரைசாமி ஆகியோர் தமிழகம் முழுவதும் கடந்த 5ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புகோட்டை, மதுரை, சிவகங்கை, கரூர், கோவை உள்ளிட்ட தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த வைகோ வைகோ, புதிய உறுப்பினர்களை சேர்த்தார். அவர் முன்னிலையில் ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் சேர்ந்துள்ளனர்.
தொடர்ந்து வைகோ நெல்லை, தேனி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை என பயணம் மேற்கொண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்கு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்து கட்சிக்கு ஆள் சேர்க்க தீவிரம் காட்டி வருகிறார் வைகோ.












Click it and Unblock the Notifications