கேலிகூத்தை நிறுத்திவி்ட்டு உதவுங்கள்-நெடுமாறன்
சென்னை: ஈழத் தமிழர்களுக்கு ரூ. 1,000 கோடி நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி கூறுவதும், இலங்கை தமிழர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்க வேண்டுமென பிரதமர் சொல்வதும் கேலி கூத்து. இந்த ஏமாற்று நாடகங்களை நிறுத்திவிட்டு உடனடியாக ஈழத் தமிழர்களுக்கு அவர்கள் உதவ வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ. ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுவதும், இலங்கைத் தமிழர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதும் அப்பட்டமான கேலிக் கூத்தாகும்.
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய அறிக்கை நாடகங்களை நடத்துவதைக் கைவிட்டு அந்த மக்களைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை பிரதமரும், முதல்வரும் எடுக்க வேண்டும்.
இலங்கையில் ராணுவக் கட்டுப்பாட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டு தமிழர்கள் திரட்டி அனுப்பிவைத்த நிவாரணப் பொருட்களை கொண்டு வந்த வணங்கா மண் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பியதைக் கண்டிக்கிறேன்.
ராணுவ முகாம்களில் உள்ள மக்கள் பட்டினியாலும், மருந்து இன்றியும் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாத இலங்கை அரசு அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவிப் பொருள்களையும் வழங்கவிடாமல் திருப்பி அனுப்பியிருப்பது மனித நேயமற்ற கொடிய செயலாகும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
மீதி தமிழர்களையாவது காப்பாற்ற வேண்டும்...
இந் நிலையில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் சென்னை அண்ணா கலையரங்கத்தில் கருத்தரங்கம் ஒன்று நடந்தது. ஈழ தமிழின அழிப்பில் ஈடுபட்ட, துணை நின்ற இனப்பகைவர்களை அடையாளம் காண்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற அந்த கருத்தரங்கில் நெடுமாறன் பேசுகையில்,
தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வெற்றி தோல்வி என்பது முக்கியமல்ல. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அணி திரண்டு நிற்பார்கள் என்பதை உலக தமிழர்களுக்கு நாம் தெரிவித்தாக வேண்டும். இலங்கை பிரச்சினையில் மக்கள் ஒன்று பட்டு நிற்க வேண்டும். அப்போது தான் மீதியுள்ள தமிழர்களையாவது காப்பாற்ற முடியும் என்றார்.