'பிரபாகரன் சயனைட் வைத்திருக்கவில்லை'-ராணுவம் கதை
இதுகுறித்து ராணுவத் தரப்பில் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவரது கழுத்தில் சயனைட் குப்பி எதுவும் இல்லை. அதேசமயம், ராணுவத்தால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உடல்களை மீட்டபோது அனைவரின் கழுத்துகளிலும் சயனைட் குப்பி காணப்பட்டது.
ஆனால் பிரபாகரன் உடலில் அதுபோல எதுவும் இல்லை. இருப்பினும் அவரிடம் அடையாள அட்டை உள்ளிட்ட மற்ற அனைத்துமே இருந்தன. இவை பின்னர் மீட்கப்பட்டன என்று தெரிவித்தனர்.
பிரபாகரன் தனது கழுத்தில் எப்போதுமே சயனைட் குப்பியை தொங்க விட்டிருப்பது வழக்கம். டெல்லியில் ராஜீவ் காந்தியுடனான சந்திப்புக்காக அவர் முன்பு வந்தபோது கூட சயனைட் குப்பியைக் கழற்றவில்லை. அதை கழற்றி விடுமாறு இந்திய பாதுகாப்புப் படையினர் கோரியபோதும் கூட திட்டவட்டமாக அதை ஏற்க மறுத்து விட்டார் பிரபாகரன் என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் ராணுவம் இதற்கு முரணான தகவலைத் தந்துள்ளது.
மேலும், சமீபத்திய வன்னிப் போரின்போது தான் ராணுவத்திடம் உயிருடனும், பிணமாகவும் சிக்கக் கூடாது. நான் உயிரிழக்க நேரிட்டால் எனது உடல் கூட ராணுவத்திடம் கிடைக்காத வகையி்ல் தீவைத்து எரித்து விடுங்கள் என்று சக போராளிகளை கேட்டுக் கொண்டிருந்தாராம் பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்புத்துறையினர் இன்னொரு முரணான தகவலையும் கூறியுள்ளார். பிரபாகரன் உயிரிழந்தபோது விடுதலைப் புலிகள் சீருடையில்தான் இருந்தார். பின்னர்தான் அவரது உடலை அடையாளம் காண்பதற்காக உடையை நீக்கினோம், மறுபடியும் அவரது சீருடையை போட்டு விட்டோம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் சில நாட்களுக்கு முன்பு பேசிய ராணுவ தளபதி ஒருவர், பிரபாகரன் கொல்லப்பட்டபோது வேறு உடையில்தான் இருந்தார். நாங்கள்தான் சீருடையைப் போட்டு விட்டோம் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம். இந்த இடத்திலும் ராணுவத்தின் தகவல் முரண்பாடாக உள்ளது.
அதேபோல இன்னொரு தகவலையும் ராணுவத் தரப்பு கூறியுள்ளது. அதாவது புலிகள் இணையதளத்தில் வெளியான ஒரு கட்டுரையில் கூறப்பட்டிருப்பது போல (சில நாட்களுக்கு முன்பு தி.வழுதி எழுதியது) பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளவில்லை. மாறாக ராணுவம்தான் அவரை சுட்டுக் கொன்றது என்று கூறியுள்ளது ராணுவம்.
மனைவி, இளைய மகன், மகள் உடல் கிடைக்கவில்லை..
அதேபோல பிரபாகரனின் மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா ஆகியோரின் உடல்கள் கிடைக்கவில்லை என்றும் ராணுவத் தரப்பு செய்திகள் கூறுகின்றன. இவர்கள் குறித்து அதற்கு மேல் ராணுவத் தரப்பு விளக்கவில்லை.
அதேசமயம், பொட்டு அம்மான் உயிரிழந்து விட்டார் என்றும், அவரது உடல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ராணுவத் தகவல்கள் கூறுகின்றன.
மே 17 மற்றும் 19ம் தேதிகளுக்கிடையே 200 புலிகள் இயக்கத்தின் பல்வேறு பிரிவு தலைவர்களும், 400க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொன்றதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.