For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெல்டிங்குமார் கொலை எதிரொலி - சிறைத்துறை டிஜிபி நடராஜ் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

DGP Natraj
சென்னை: புழல் மத்திய சிறைக்குள், பிரபல ரவுடி வெல்டிங் குமார் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, சிறைத்துறை டிஜிபி நடராஜ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி வெல்டிங்குமார் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

புழல் சிறையில் நேற்று முன்தினம், கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் வெல்டிங்குமார் இரும்புக் கம்பிகளால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, தலைமைக் காவலர் குணசேகரன், தலைமை வார்டன் குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் நேற்று காலை உத்தரவிட்டார்.

ஜெயிலர் அன்சர் பாஷா, துணை கண்காணிப்பாளர் சவுந்திரராஜன் ஆகியோரை வேறு சிறைகளுக்கு மாற்றுமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. சிறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரனுக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நடராஜ் மீதும் தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவரை தீயணைப்புத் துறை இயக்குநராக மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்து வந்த ஷியாம் சுந்தர் புதிய சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் மாற்றங்களைக் கொண்டு வந்த நடராஜ்...

முன்பு ஜெயலலிதாவை புகழ்ந்து பேசப் போய் சென்னை மாநகர ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் நடராஜ். அதன் பின்னர் அவர் முக்கியப் பதவிகளில் இல்லாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில்தான் சிறைத்துறைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறைத்துறைத் தலைவராக வந்த பின்னர் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். சிறைகளில் கைதிகளுக்கு தேர்வு எழுத அனுமதி, கைதிகளை குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

சிறைச்சாலைகளுக்குள் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளையும் அவர் செய்து வந்தார்.

நடராஜ் சிறைக்குள் நடக்கும் ரவுடி ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், அவருக்கு கீழ் செயல்பட்ட அதிகாரிகள் அரசியல் செல்வாக்கோடு செயல்பட்டு தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனராம். இதனால் நடராஜின் நடவடிக்கைகளுக்கு முழு பலனும் இல்லாமல் போய் விட்டது.

சமீபத்தில் சில கைதிகளிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தபோது அவர்கள், சில சிறை ஊழியர்களின் தூண்டுதலின்பேரில் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டி போராட்டம் நடத்தினார்கள்.

டி.ஜி.பி. நடராஜ் மட்டும் கடும் நடவடிக்கை எடுத்தபோதும், மற்ற ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் சிறைத்துறை நிர்வாகம் சீரழிந்துபோய் விட்டதாக சிறைத்துறை ஊழியர்களே வருத்தத்துடன் கூறுகின்றனர்.

இப்படி சிறைத்துறையில் உள்ள சிலரின் ஒத்துழைப்புக் குறைவாலும், கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும், நடந்து விட்ட ஒரு ரவுடி கொலையால் தனது பதவியை இழந்துள்ளார் நடராஜ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X