ஆஸி-இந்தியர்களை தொடர்ந்து இலங்கை மாணவர்களுக்கு அடி

சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியர்களை தாக்கிய சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.
இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத், இந்திய மாணவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட கூடாது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் நேற்று வடக்கு கான்பெரா பகுதியில் வசித்து வந்து இலங்கை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று இலங்கை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று ஜன்னலை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. அவர்களை நோக்கி இனவெறியை தூண்டும் வகையில் கூச்சலிட்டது.
பின்னர் அங்கிருந்த கார் கண்ணாடியையும் உடைத்துவிட்டு ஓடிவிட்டது.
இது குறித்து இலங்கை மாணவர் விஜேசூர்யா கூறுகையில், சிட்னி மற்றும் மெல்போர்னில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து இங்கே வாழ்வதற்கே பயமாக இருக்கிறது. நாங்கள் வெளியில் எங்கும் போவதில்லை. கல்லூரிக்கு சென்றுவிட்டு நோராக வீட்டுக்குள் வந்து முடங்கி கிடக்கிறோம்.
நேற்று எங்கள் வீடுகளை தாக்கியவன் கையில் கத்தி வைத்திருந்தான். எங்கள் பகுதியை விட்டு வெளியேறு என எச்சரித்துவிட்டு சென்றான் என்றார்.
இதை தொடர்ந்து இதுவரை சிட்னி மற்றும் மெல்போர்ன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்த இனவெறி தாக்குதல் தற்போது ஆஸ்திரேலிய தலைநகரான கான்பரொவுக்கும் பரவியுள்ளது தெரிய வருகிறது.
இது குறித்து கான்பெரா போலீசார் ஒருவர் கூறுகையில், நாங்கள் பல சம்பவங்களை விசாரித்து வருகிறோம். ஆனால் அவர்கள் இனவெறி காரணமாக தாக்கப்பட்டதாக யாரும் கான்பெராவில் இதுவரை புகார் செய்யவி்ல்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து கான்பெரா ஆஸ்திரேலிய இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் மது கலியா கூறுகையில், இதற்கு முன் கான்பெராவில் எந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை. இதுவரை அமைதியாக தான் இருந்தது என்றார்.
இந்நிலையில் இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று இரவு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் லெபானிய இளைஞர்கள் சிலர் இருப்பதாகவும், அவர்கள் தான் இந்த சம்பவங்களை தூண்டிவிடுவதாகவும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும், தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசார் கண்டுகொள்வதில்லை என்றனர்.












Click it and Unblock the Notifications