அஸ்ஸாமில் சுகோய் படையை நிறுத்தியது விமானப்படை
மிகவும் எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் நான்கு சுகோய் விமானங்கள் அஸ்ஸாம் மாநிலம் தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சேர்க்கப்பட்டன.
சமீபத்தில் ஏஎன் 32 ரக விமானம் விபத்துக்குள்ளாகி ஏழு விமானப்படையினரும், 6 ராணுவத்தினரும் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகோய் சேர்ப்பு நிகழ்ச்சி எளிமையாக நடந்தது.
நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தை பாதுகாக்கும் வகையில், சுகோய் ரக போர் விமானங்களை அஸ்ஸாம் பிரிவுக்கு கொண்டு வ்நதுள்ளது விமானப்படை.
ஜூன் 15ம் தேதி முதல் தேஸ்பூர் விமான தளத்தில் சுகோய் படை முழு ஆயத்த நிலைக்கு வந்து விடும்.
அதேபோல மேல் அஸ்ஸாமில் உள்ள சபுவா என்ற இடத்திலும் இன்னொரு சுகோய் படைப் பிரிவு ஏற்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே தேஜ்பூர் விமானப்படைத்தளம் பலப்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மிக் படைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுகோய் படைகளுக்காக விமான தளம் தயாராக்கப்பட்டது.
விரைவில் தேஜ்பூர் விமானப்படைத் தளம் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளுக்கு முழுமையாக தயாராகி விடும்.
சுகோய் -30 ரக போர் விமானம் அதி நவீனமானது. 2 பேர் அமர்ந்து செல்லக் கூடியது. அனைத்து விதமான வானிலையையும் தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மை கொண்டது. வானிலிருந்தபடியே எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அணு ஆயுதங்களையும் இது சுமந்து செல்லக் கூடிய வல்லமை படைத்தது.
ரஷ்யாவிலிருந்து பெற்ற தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தைக் கொண்டு, தற்போது நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திலேயே சுகோய் ரக போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தேஜ்பூர் தவிர கிழக்கு மற்றும் வட கிழக்கில் உள்ள சபுவா, ஜோர்ஹட் (இரண்டும் அஸ்ஸாம்), பூர்னியா (பீகார்), பனாகர் (மேற்கு வங்கம்) ஆகிய விமான தளங்களும் அதி நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.
சீனாவின் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் வகையில் வட கிழக்குப் பகுதியில் தற்போது மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.