ராஜபக்சே தம்பி கோத்தபாயா அரசியலில் நுழைய முடிவு
கொழும்பு: இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை வெற்றிகரமாக திட்டமிட்டு நடத்தி முடித்த பெருமைக்குரியவரான அதிபர் ராஜபக்சேவின் தம்பி, கோத்தபாய ராஜபக்சே, விரைவில் அரசியல் பிரவேசம் மேற்கொள்கிறார்.
கோத்தபாயாவை தனது அரசியல் வாரிசாக ராஜபக்சே உருவாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு வெற்றி பெற ராஜபக்சே மட்டுமல்லாது அவரது தம்பி கோத்தபாயுவும்தான் முக்கிய காரணம்.
கோத்தபாயவும், ராணுவத் தளபதி பொன்சேகாவும் இணைந்துதான் தமிழினப்படுகொலையை திட்டமிட்டு அரங்கேற்றினர். இவர்கள் இருவரும் கேட்ட உதவிகளையெல்லாம் அதிபர் ராஜபக்சே வழங்கியதால் போரில் அவர்கள் வெல்ல முடிந்தது.
இந்த நிலையில், புலிகளோடு சேர்த்து பாதித் தமிழினத்தையும் அழிக்க உதவியவர்களுக்கு அரசியல் அரங்கில் உயர்வு தர அதிபர் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
முதலில் தனது தம்பியான கோத்தபாயவை அரசியலுக்கு அவர் இழுக்கிறார். கோத்த, இப்போது பாதுகாப்புத்துறை செயலாளராக இருக்கிறார்.
குருநாகர் மாவட்ட சுதந்திராக் கட்சியின் தேர்தல் அமைப்பாளராக கோத்தபாய நியமிக்கப்படவுள்ளார். மேலும், விரைவில் பொதுத் தேர்தலை நடத்தவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். அப்போது கோத்தபாயவை எம்.பி தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்து அப்படியே அமைச்சராக்கி விடவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளாராம்.
ஏற்கனவே ராஜபக்சே தவிர அவரது இரு தம்பிகள் அரசியலில் உள்ளனர். இப்போது நான்காவது ஆளாக கோத்தவும் களம் இறங்கப் போகிறார்.
கோத்தவைத் தொடர்ந்து ராணுவ தளபதி பொன்சேகாவையும் அரசியலுக்கு ராஜபக்சே இழுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோத்தபாயவை தனது அரசியல் வாரிசாகவும் ராஜபக்சே உருவாக்க முனைவதாகவும் பேச்சு அடிபடுகிறது.