கடத்தல் எதிரொலி- ஆதரவற்ற சிறார்கள் வேறு இல்லத்திற்கு மாற்றம்
நெல்லை: சிறார்கள் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள அனாதைகள் இல்லத்தில் இருந்த குழந்தைகள் வேறு இல்லத்திற்கு மாற்றப்பட்டன.
தமிழகத்தில் குழந்தைகளை கடத்தி பின்னர் அனாதை இல்லம் என்ற பெயரில் விற்பனை செய்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி , பெரம்பலூர் மற்றும் ராஜபாளையத்தில் கடந்த 6 மாதத்தில் 7 பச்சிளங்குழந்தைகளை கடத்தி பணத்திற்காக ஒரு கும்பல் விற்பனை செய்துள்ளது. இதில் தொடர்புடைய வள்ளியூரை சேர்ந்த அன்பு சிறுவர் இல்ல உரிமையாளர் ராஜன் உள்பட 3 பேரை திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து நெல்லை, கன்னியாகுமரி , தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அனாதை இல்லம் என்ற பெயரில் பணத்திற்காக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வருபவர்கள் பற்றிய விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் குழந்தைகளை கடத்திய புரோக்கர்களான தென்காசியை சேர்ந்த கோட்டையம்மாள், சாம்பவர் வடகரை பொன்னுதாய், கடையநல்லூர் அருணாசலவடிவு, எஸ்தர், தென்காசி ஐயப்பன் மனைவி வேல்மயில், உசிலம்பட்டியை சேர்ந்த பூச்சியம்மாள், கோடாங்கி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 3 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வள்ளியூரில் செயல்பட்டு வந்த அன்பு சிறார் இல்லத்தை மூட சமூகநலத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று மாலை சமூகநல அலுவலர் உமா தேவி மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினரும் ஜான்சன் தலைமையில் சமூகநலத்துறை ஊழியர்கள் அந்த இல்லத்திற்கு வந்தனர். அங்குள்ள குழந்தைகள் பிண்ணனி பற்றி விசாரித்தனர்.
குழந்தைகளுக்கு வள்ளியயூர் அரசு மருத்துவர் குமார முருகன் தலைமையில் மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை செய்தார். பின்னர் 2 பெண் குழந்தைகள் உள்பட 6 குழந்தைகள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்பின் அன்பு சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 19 ஆண் குழந்தைகள் உள்பட 34 குழந்தைகளை சீதாராமபுரம் ஸ்ரீகன்னியாகுமரி குருகுல ஆசிரமத்தில் சேர்க்க அழைத்து சென்றனர்.
அவர்களுடன் ராதாபுரம் தாசில்தார் செல்வராஜ், வள்ளியூர் டிஎஸ்பி சுப்பையா, தனிப்படை போலீசார், துணை தாசில்தார் தாமோதரன், சுகாதார துறை அலுவலர் ரகுபதி ஆகியோர் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications