காயமடைந்த தமிழர்களை புல்டோசர் ஏற்றி ராணுவம் கொன்றது - மனித உரிமை குழு
லண்டன்: வன்னியில் கடைசி கட்டமாக நடந்த போரின்போது காயமடைந்து கிடந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை மிகக் கொடூரமாக புல்டோசர் ஏற்றிக் கொன்று மற்ற உயிரிழந்தவர்களின் உடல்களுடன் சேர்த்து புதைத்தது ராணுவம் என்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையை, லண்டனைச் சேர்ந்த கார்டியன் இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை ராணுவத்தினர் கடைசி கட்ட போரின்போது தங்களது மேலதிகாரிகள் பிறப்பித்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையையும் தாண்டி மிக மோசமாக நடந்து கொண்டனர்.
அப்பாவி மக்கள் பதுங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அந்த பதுங்கு குழிகள் மீது ராணுவ வாகனங்களை ஏற்றி உயிரோடு நசுக்கிக் கொன்றனர்.
காயம் அடைந்து குற்றுயிராய் கிடந்த அப்பாவி தமிழர்களை மிகக் கொடூரமாக, புல்டோசர்களை ஏற்றிக் கொன்று, அவர்களை இறந்தவர்களுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக புதைத்தனர்.
சரணடைந்த விடுதலைப் புலிகளையும் சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.