பாஜக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த பிரபாகரன்
இருப்பினும் தனது எதிர்பார்ப்புக்கு மாறாக மீண்டும் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டதால், அவரது நம்பிக்கை தகர்ந்து போனதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது.
இதுகுறித்து இலங்கை ராணுவத் தரப்பு கூறுகையில், மே 16ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்திருந்தார் பிரபாகரன். அன்றுதான் இந்திய தேர்தல் முடிவுகள் வெளியானது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது 3வது அணி ஆட்சியைப் பிடிக்கலாம். அதுவரை காத்திருந்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என அவர் தீர்மானித்திருந்தார்.
இதன் காரணமாக தன் வசம் இருந்த மக்கள் வெளியேறி விடாமல் தடுத்து வைத்திருந்தார் பிரபாகரன். இருப்பினும் காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டதால் அவரது நம்பிக்கை தகர்ந்து போனது.
தன் வசம் இருந்த மக்கள் வெளியேற அவர் அனுமதித்தார். அவரும், அவருடன் இருந்த புலிகளும் இறுதி வரை போராடி மடிய முடிவு செய்தனர்.
அதேசமயம், பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் எந்த வழியிலும் தப்பிச் செல்ல முடியாதபடி ராணுவம் நெருக்கி விட்டது என்று ராணுவம் கூறியுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் வட்டாரத் தகவல்கள் கூறுகையில், தமிழகத்தில் காங்கிரஸுக்கு எதிராக பெரும் எழுச்சி ஏற்படும் என விடுதலைப் புலிகள் பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.
இதன் காரணமாக மத்தியில், மூன்றாவது அணி அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்றும் அவர்கள் நம்பினர்.
ஆனால் தேர்தல் முடிவுகள் பிரபாகரனை அப்செட் ஆக்கி விட்டன. அதற்கு மேல் சிந்திக்க அவர்களுக்கு நேரம் இல்லை. ராணுவம் அனைத்து பகுதிகளிலும் முற்றுகையிட்டிருந்ததால் தப்பிச் செல்லவும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது என்று தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த மே 16ம் தேதி பிற்பகலில், விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவர் செல்வராசா பத்மநாதன், விடுதலைப் புலிகள் தோல்வி அடைந்து விட்டதாகவும், வன்னியில் உள்ள மக்களைக் காப்பாற்ற உலக சமுதாயம் முன்வர வேண்டும் என்றும் கோரி அறிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.
தன்னையும், தனது போராளிக் குழுவினரையும் இவ்வளவு வேகமாக இலங்கை ராணுவம் முற்றுகையிடும் எனவும் பிரபாகரன் நினைத்துப் பார்க்கவில்லையாம்.
ஆனால் பிரபாகரன் இருப்பிடத்தை ராணுவம் விரைவில் நெருங்க முக்கிய காரணம், ராணுவம் வசம் பிடிபட்ட கடல் புலிகள் பிரிவு தலைவர் சூசையின் மனைவி கொடுத்த தகவல்தான் என்று கூறப்படுகிறது. அவரை ராணுவம் மிகக் கடுமையான முறையில் விசாரித்து, பிரபாகரன் உள்ளிட்டோர் மறைந்திருந்த பகுதி குறித்த தகவலை வாங்கி விட்டனராம். இதன் காரணமாகவே பிரபாகரன் உள்ளிட்டோர் போர்ப் பகுதியிலேயே இருந்தது ராணுவத்திற்கு உறுதியாக தெரிய வந்ததாம்.
இதையடுத்தே ராணுவம் படு வேகமாக பிரபாகரன் மறைந்திருந்த இடத்தை சுற்றிலும் குவிக்கப்பட்டதாம். இதன் மூலம் பிரபாகரன் உள்ளிட்ட யாருமே தப்ப முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.