ரூ. 5 கோடி கேட்டு கடத்தப்பட்ட பி.இ. மாணவர் பத்திரமாக மீட்பு
புதுச்சேரி: ரூ. 5 கோடி பணம் கேட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடிக் கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட என்ஜீனியரிங் கல்லூரி மாணவரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். அந்த ரவுடிக் கும்பலைப் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.
புதுச்சேரி ரெயின்போ நகர் முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெகதீஸ். இவர் ஒரு தொழிலதிபர். இவரது 2-வது மகன் அமீத்குமார். இவர் அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 10-ந்தேதி கல்லூரி சென்ற பின் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
இந்த நிலையில் அமீத்குமாரின் செல்போனிலிருந்து ஒரு நபர் ஜெகதீஸைத் தொடர்பு கொண்டார். மகனை நாங்கள் கடத்தி வைத்து இருக்கிறோம். ரூ.5 கோடி கொடுத்தால் மகனை ஒப்படைத்து விடுவோம். போலீசிடம் சென்றால் மகனை கொன்று ரோட்டில் வீசுவோம் என்று மிரட்டியுள்ளான் அந்த மர்ம மனிதன்.
இதையடுத்து போலீஸாரை அணுகினார் ஜெகதீஷ். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படைகளை அமைத்தனர்.
போலீஸார் கடத்தல் கும்பலின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தனர். அது ரவுடிக் கும்பலுக்குத் தெரிய வந்து அதைக் கூறி ஜெகதீஷை மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில், கடத்தல் கும்பலின் கார் எண் போலீஸாருக்குக் கிடைத்தது. இதை வைத்து போலீஸார் தீவிரமாக வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில் திண்டிவனம் ரயில் நிலையத்திற்கு பணத்துடன் வர வேண்டும். பணத்தைக் கொடுத்தால் மகனை உயிருடன் விடுவிப்போம் என்று கடத்தல் கும்பல் கூறியுள்ளது.
இதையடுத்து போலீஸாரின் ஆலோசனையின்படி ஜெகதீஸ் அங்கு சென்றார். அவரை மாறுவேடத்தில் இருந்த போலீஸார் பின் தொடர்ந்தனர்.
ஆனால் போலீஸார் வருவதை அறிந்து கொண்ட கடத்தல் கும்பல், இனி உன் மகனை உயிருடன் பார்க்க முடியாது என்று ஜெகதீஸை மிரட்டி விட்டு போனை வைத்து விட்டது.
இதையடுத்து கடத்தல் கும்பலை வளைத்துப் பிடிக்க போலீஸார் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பயன்படுத்திய கார் புதுச்சேரிக்குள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து புதுவை எல்லை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் புதுவையிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்தல் கும்பலின் கார் வந்ததைப் பார்த்த போலீஸார் காரைத் துரத்தினர்.
போலீஸாருக்கும், கடத்தல் கும்பலுக்கும் இடையே கடும் சேசிங் நடந்து.
இனி தப்ப முடியாது என கருதிய கடத்தல் கும்பல் அமீத் குமாரை காரிலிருந்து தள்ளி விட்டு விட்டு மின்னல் வேகத்தில் போய் விட்டது. உயிருடன் மீண்ட அமீத் குமாரை போலீஸார் மீட்டனர்.
பெற்றோருக்குத் தகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்து மகனை உச்சிமோர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
இந்த கடத்தலில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் எனத் தெரிய வந்துள்ளது. அமீத்குமாருடன் படிக்கும் ஒரு மாணவர்தான் இந்த கடத்தலுக்கு உதவியதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அந்த மாணவரையும், கடத்தலில் ஈடுபட்ட ரவுடிக் கும்பலையும் பிடிக்க போலீஸார் வலை வீசியுள்ளனர்.