ரேஷன் கார்டுக்கு அலைக்கழித்த தாசில்தாருக்கு கலெக்டர் எச்சரிக்கை
புளியங்குடி: ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக இரண்டு பெண்களை அலைக்கழித்த சிவகிரி தாசில்தாருக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் 11 தாலுக்காக்களில் கடந்த 4ம் தேதி முதல் ஜமாபந்தி தொடங்கியது. அதன்படி சிவகிரி தாலுகாவில் 4ம் தேதி, வாசுதேவநல்லூர் தாலுகாவில் 5ம் தேதி, 9ம் தேதி சிவகிரி, 10ம் தேதி கூடலூர் ஆகிய பிர்காக்களில் அடங்கியுள்ள 29 கிராமங்களுக்கு கணக்கு தீர்வாய பணி கலெக்டர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
அப்போது பொதுமக்கள் 890 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் ரேஷன் கார்டு, வாரிசு சான்றிதழ், முதியோர் பென்சன் உள்ளிட்ட மனுக்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டியை சேர்ந்த விஏஒ ராமகிருஷ்ணன் இறந்ததற்கு அவரது மனைவிக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்காமல் காலதாமதப்படுத்தியதற்காக வருவாய் ஆய்வாளர் கண்ணனை கடுமையாக எச்சரித்தார்.
இந்நிலையில் நேற்று காலையில் பெறப்பட்ட மனுக்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணி சிவகிரி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் ஜெயராமன் பட்டா மாறுதல் சான்று, உதவி தொகை சான்றிதழ்கள், ரேஷன் கார்டுகள் உள்ளிட்டவைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அப்போது பட்டா மாறுதல் சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்காத தாசில்தார் கோமதி நாயகத்தையும், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 2 பெண்களை அலைகழித்து காலதாமதப்படுத்தியதற்காக குடிமைப் பொருள்கள் வழங்கல் தாசில்தார் ராமரையும் கடுமையாக எச்சரித்தார்.
மேலும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத உங்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications