பிரசவம் பார்த்த நர்ஸ்: இறந்து பிறந்த குழந்தை - அரசு மருத்துவமனையில் அவலம்
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு மருத்துவமனை ஒன்றில் டாக்டர் பணியில் இல்லாததை அடுத்து ஒரு பெண்ணுக்கு நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்து பிறந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் வசிப்பவர் மணிப்பால். இவரது மனைவி கனகா (23). நிறைமாத கர்ப்பிணியான கனகாவை கடந்த 9ம் தேதி மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக மணிப்பால் சேர்த்துள்ளார்.
ஆனால், தற்போது அந்த மருத்துவமனையில் டாக்டர்கள் யாரும் பணியில் இல்லை. இந்த நிலையில், கனகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் நர்சுகள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.
இந்நிலையில் டாக்டர்கள் இல்லாததை அறிந்த மணிப்பால் தனது மனைவியை வேறு மருத்துவமனைக்கு அழைத்து செந்று பிரசவம் பார்த்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் இதற்கு நர்ஸ்கள் மறுத்துவிட்டனர். பின்னர் சில நர்ஸ்கள் சேர்ந்து கனகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
இதில் கனகாவிற்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால் பரிதாபகரமாக அது இறந்தே பிறந்தது.
குழந்தை இறந்து பிறந்ததால் ஆத்திரமடைந்த கனகாவின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று திரண்டு மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் திண்டிவனம் புதுச்சேரி சாலையில் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது.
தகவல் அறிந்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் மற்றும் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.