பிரதமர் இன்று ரஷ்யா பயணம்-பாக். அதிபருடன் பேச்சு
டெல்லி: மூன்று நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை ரஷ்யா செல்கிறார். அவர் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை சந்தித்து பேசுகிறார்.
இரண்டாவது முறையாக பிரதமரான பின் பிரதமர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
ரஷியாவில் யெகடரின்பர்க் நகரில் 'ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு' உச்சி மாநாட்டில் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். இந்த அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதமர் கலந்து கொள்வதும், இதுவே முதல்முறையாகும்.
இந்த அமைப்பில் ரஷ்யா, சீனா, கஜாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மங்கோலியா ஆகியவை பார்வையாளர்களாக உள்ளன.
இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதார மந்தம், தீவிரவாதம், உணவு, பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளைக் கொண்ட 'பிரிக்' (BRIC) அமைப்பின் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இதிலும் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார்.
இதிலும் பொருளாதார மந்தம், பாதுகாப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ஜி-20 மாநாட்டு செயல்திட்டப்படி இந்த விவாதம் நடக்கிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார்.
இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்பதால் இதற்கு செயல் திட்டம் ஏதும் வகுக்கப்படவில்லை. ஆனாலும் தலிபான்கள் ஆதிக்கம், மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாத அமைப்புகள் மீதான நடவடிக்கை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் பேசவுள்ளனர்.
மும்பை தாக்குதலுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறை.
இந்தச் சந்திப்பில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்து மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சு தொடர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications