அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சென்னை: சென்னையில் பெண்ணின் கழுத்தை அரிவாள் மனையில் வெட்டி 5 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் பழைய பேப்பர், இரும்பு பொருட்கள் வாங்கும் வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்னலட்சுமி (28) தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி அன்னலட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவர் தனியாக இருப்பதை அறிந்த கொண்ட அந்த வீட்டு உரிமையாளரின் வளர்ப்பு மகன் ஆனந்த், அன்னலட்சுமியின் 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். ஆனந்த் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பஸ் டிரைவாக வேலை பார்த்து வருகிறார்.
இதையடுத்து சுதாரித்து கொண்ட அன்னலட்சுமி சத்தமிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு கூப்பிட முயன்றார். இதையடுத்து ஆத்திரமடைந்த ஆனந்தன் வீட்டிலிருந்த அரிவாள் மனையால் அன்னலட்சுமியின் கழுத்தில் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த அன்னலட்சுமி சுருண்டு விழுந்தார். ஆனந்தன் 5 பவுன் தங்க சங்கிலியுடன் தப்பித்து ஓடிவிட்டான். பின்னர் அவர் வீட்டுக்கு வெளியே வந்து அந்த பக்கம் வந்தவர்களிடம் தன்னை காப்பாற்றுமாறு சைகை காட்டினார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அரிவாள் மனை பழையது என்பதால் வெட்டு ஆழமாக விழவில்லை. இதையடுத்து அவர் உயிர்பிழைத்தார். டாக்டர்கள் அவருக்கு கழுத்தில் தையல் போட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் மருத்துவமனை சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டு உரிமையாளர் மகன் தான் இதற்கு காரணம் என பேப்பரில் எழுதி காட்டினார்.
இதையடுத்து போலீசார் ராமாவரத்தில் உள்ள ஆனந்தனின் வீட்டு சென்று தேடினார். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் வீட்டில் ரத்தக்கறை படிந்த ஒரு சட்டையை போலீசார் கண்டெடுத்தனர். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்