தாம்பரம் பச்சைமலைக்கு வரும் காதல் ஜோடிகள்.. புதருக்குள் மறைந்து இருந்த சங்கர்.. சிறப்பு கவனிப்பு
சென்னை: தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனைக்கு மேலே அமைந்துள்ள பச்சைமலையில் பிரசித்திபெற்ற சிவன் கோவில், முருகன் கோவில், அம்மன் கோவில் என 3 கோவில்கள் அமைந்துள்ளன. இங்கு உள்ளூர் மக்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் ரீல்ஸ்களில் இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் வெளிச்சம் போட்டு காட்டியதால், காதலர்களுக்கு பிடித்தமான ஸ்பாட்டாக மாறியது. அடிக்கடி காதல் ஜோடிகள் சென்று வருகிறார்கள். அப்படி செல்லும் காதல் ஜோடிகளுக்கு புதருக்குள் மறைந்து இருக்கும் சங்கரால் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனைக்கு மேல் அமைந்துள்ளது பச்சைமலை . இங்கு பிரசித்திபெற்ற சிவன் கோவில், முருகன் கோவில், அம்மன் கோவில் என 3 கோவில்கள் உள்ளன. இந்த மூன்று கோவிலுக்கும் செல்ல தனித்தனி பாதை வசதிகள் உள்ளன. இது வனத்துறை மற்றும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இங்கு கோவில்களை தாண்டி, ஏராளமான மூலிகை செடிகள் மற்றும் சிறிய ரக பறவைகள், பட்டாம்பூச்சிகள் இருக்கின்றன.

மொத்த சென்னை புறநகரையும் ட்ரோன் வியூ மூலமாக பார்க்க வேண்டும் என்றால், பச்சை மலைக்கு தான் வர வேண்டும். சென்னையின் புறநகர் பகுதிகள், சென்னையின் பல்வேறு பகுதிகளின் இயற்கை அழகை ரசிக்கும் இடமாக பச்சைமலை இருக்கிறது. இந்த இடம் இன்ஸ்டா இன்புளுயன்சர்கள் போட்ட வீடியோக்களால் வேகமாக பிரபலம் அடைந்தது. இதனால் புகைப்பட கலைஞர்கள் மற்றும் காதல் ஜோடிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
அப்படி வரும் காதல் ஜோடிகள், தன்மை விரும்பிகள் ஜாலியாக சுற்றி பார்த்து செல்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக இங்கு வரும் காதலர்கள் மற்றும் புகைப்பட பெண் கலைஞர்களிடம் குல்லா அணிந்துள்ள ஒரு மர்ம நபர் ஆபாச சைகை காட்டுவதாகவும், பட்டாம்பூச்சிகளை புகைப்படம் எடுக்கும் போது புதருக்குள் மறைந்து இருந்து திடீரென வெளியே வந்து பயமுறுத்துவதாகவும் தொடர்ந்து குரோம்பேட்டை காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் சாதாரண உடையில் காவலர்கள் மலைப்பகுதியை கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் குரோம்பேட்டை துர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் சங்கர் என்பதும், இவர் பல நாட்களாக தனிமையில் இருக்க வரும் காதலர்களிடம் ஆபாச சைகைகள் காட்டி சில்மிஷத்தில் ஈடுபட்டதும், புதருக்குள் ஒளிந்திருந்து நோட்டமிட்டவாறு புகைப்படம் எடுப்பவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்திருக்கிறது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பச்சைமலையில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்














Click it and Unblock the Notifications