அசத்தும் அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ்.. பழனி கோவிலில் மிகப் பெரிய மாற்றம்! இனி ப்ரோக்கர் தொல்லை இல்லை
திண்டுக்கல்: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பின்படி, உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு டிஜிட்டல் சேவைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதற்கட்டமாக இன்று முதல் ரோப்கார் ஆன்லைன் முன்பதிவுப் பயணம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம் பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஆன்லைன் மூலம் ரோப் காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனால் நேர விரயம் தவிர்க்கப்படுவதோடு, பழனி கோவிலில் இடைத் தரகர்களின் தொல்லை குறையும் என்கின்றனர் பக்தர்கள்.
உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் முதன்மையான கோயில் பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் தான். இந்த கோயிலுக்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் இருந்து ஏரளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கிறார்கள்.
பழனிக்கு என்றே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். குறிப்பாக பொதுவாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் முருக பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

பழனி முருகன் கோவில்
அந்த காலக்கட்டத்தில நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பல நாட்கள் கூட்டம் அலைமோதும். அதேநேரம் மற்ற நேரங்களில் விசேஷ நாட்களில் மற்றும் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில், ஞாயிறுகளில் பழனி முருகன் கோயிலுக்கு கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் பழனி கோவிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் காத்திருப்பு அறை மற்றும் ரோப் கார் சேவை குறித்து பல புகார்களை தெரிவித்தனர்.
அமைச்சர் ரமேஷ்
இதனையடுத்து பழனி கோவிலில் குறைபாடுகள் சரி செய்யப்படும் என பக்தர்களிடம் உறுதி அளித்திருந்தார் அமைச்சர் ரமேஷ். இந்நிலையில், தமிழக அரசு முதன்மை கோயில்களில் ஆன்லைன் சேவைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பழனி முருகன் கோயிலில் கால பூஜைகளில் பங்கேற்பதற்கும், மின்இழுவை ரயில் (வின்ச்) பயணத்திற்குமான ஆன்லைன் முன்பதிவு வசதி சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது.
ரோப்கார் முன்பதிவு
அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது ரோப்காரில் பயணம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வசதி முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைத் தேர்வு செய்து, ஒரு நபருக்கு அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்குச் சென்று வர 100 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஆன்லைன் முன்பதிவு
இந்த ஆன்லைன் முன்பதிவு மூலம், நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 50 பேரும் என முதற்கட்டமாக அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தங்களது பயணத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே, கோயிலில் தினசரி நடைபெறும் 6 கால பூஜைகளில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு வசதியும் தற்பொழுது சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட கால பூஜைக்கு 5 டிக்கெட்டுகள் மட்டுமே தற்பொழுது பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
தங்கும் விடுதி
இதனைத் தொடர்ந்து, மிக விரைவில் கோயிலுக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளுக்கான அறைகளையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதிகள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட உள்ளதாகக் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்புதிய வசதிகள் பழனிக்கு வரும் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.














Click it and Unblock the Notifications