பட்ஜெட்டுக்கு முன்னாடி.. ரிப்போர்ட் என் கையில் இருக்கணும்.. திமுக அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்!
சென்னை: கட்சி நிதி குறித்து சட்டமன்றத்தில் குற்றம் சாட்டினார் முதல்வர் விஜய். இதனை கடுமையாக எதிர்த்த திமுக, வெளிநடப்பு செய்தது. இந்த விவகாரத்தை பெரிய விஷயமாக்க விஜய் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் விஜய், எதிர்த்துப் பேசினால்தான் தாங்கள் எதிர்க்கட்சி என்பதை நிரூபிக்க முடியும் என்று நினைத்துச் செயல்படும் எதிர்க்கட்சியினருக்கு என் முதற்கண் நன்றி. தவெகவைத் தேர்ந்தெடுத்து அரியணையில் அமரவைத்த தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலர் நான் ஏதோ ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்து முதலமைச்சர் ஆனது போல ஒரு பிம்பத்தை (Image) கட்டமைக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் - இது வெறும் ரீல் கிடையாது, ரியல்! நான் சினிமாவில் அரசியலைப் பேசியதாலேயே எனது திரைப்படங்கள் சந்தித்த, இப்போதும் சந்தித்து வருகிற நெருக்கடிகளும் சிக்கல்களும் ஒட்டுமொத்த தமிழகமும் அறிந்ததுதான். நடிகனாக வாழ்க்கையைத் தொடங்கினாலும், பல நிலைகளைக் கடந்து, மக்களின் இதயங்களில் இடம் பிடித்துத்தான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். 1990-களிலேயே ரசிகர் மன்றமாக இருந்த காலத்திலேயே நாங்கள் மக்களுக்குத் துணையாக நின்றவர்கள்.
கட்சி நிதி - விஜய் விமர்சனம்
கட்சி நிதி என்று கூறி நாங்கள் கொள்ளையடிப்பது இல்லை. அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மறைமுகமாகத் தாக்கிய முதல்வர், "ஒரே குடும்பம் மட்டுமே முக்கியம் என்பது எங்கள் கொள்கை அல்ல; தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் முக்கியம் என்பதைச் சொல்லும் ஆட்சிதான் இந்த தவெக ஆட்சி. காசு கொடுத்து வாக்கு வாங்கும் நச்சு கலாச்சாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
எங்கள் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் எல்லாரும் புதியவர்கள் தான். எங்களுக்கு மக்கள் சேவை செய்ய மட்டும்தான் தெரியுமே தவிர, மக்கள் பணத்தைச் சுருட்டத் தெரியாது. கோயில் பணத்தையோ, கனிம வளங்களையோ கொள்ளையடிக்க எங்களுக்குத் தெரியாது. நமக்கு எதிராக நாம் எதிர்பாராத நபர்கள் எல்லாம் தற்போது ஒன்று சேருகிறார்கள், என்று விஜய் காட்டமாக பேசி இருந்தார்.
விஜய் சும்மா விட மாட்டார்
இந்த கட்சி நிதி குறித்த விவகாரங்கள் அப்போது முதல் இப்போது வரை பேசு பொருளாகவே இருந்து வருகிறது. இந்த கட்சி நிதி விஷயத்தை அப்படியே விட்டு விட முதல்வர் விஜய் தயாராக இல்லையாம். இது குறித்து தனது செயலாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை கொடுத்துள்ளார் விஜய். அதன்படி முதல்வரின் செயலாளர்கள், சுறுசுறுப்பாக தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
கோட்டையிலுள்ள அதிகாரிகள் மத்தியில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்ற தகவல் கிடைக்க, அது குறித்து விசாரித்த போது, " திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்திருக்கிறது. அதேசமயம், கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட் ) பல துறைகளில் வசூலிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த துறைகளில் வசூலிக்கப்பட்டன? எவ்வளவு வசூலிக்கப்பட்டது? யார் யார் இந்த நிதியை கொடுத்தனர்? யாரிடம் இந்த நிதி கொடுக்கப்பட்டது? போன்ற முழு விபரங்களும் வேண்டும்.
கட்சி நிதியை எந்த கட்சி வசூலித்தது என வெளிப்படையாக எதிர் கட்சி தலைவர் ஆவேசப்பட்டார் அல்லவா? அவருக்கு பதில் சொல்லுவோம். பட்ஜெட் கூட்டத்தில் கட்சி நிதி வசூல் ஊழலை அம்பலப்படுத்த வேண்டும். அதனால் முழு விபரங்களையும் சேகரித்து ரிப்போர்ட் கொடுங்கள் என விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால், 16 துறைகளில் கட்சி நிதி சம்மந்தப்பட்டுள்ளது என முதல் கட்டமாக தெரிந்து அதன் பட்டியலை முதல்வரின் செயலாளர்கள் தயாரித்து வருகிறார்கள். இந்த மாதம் தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தில் கட்சி நிதி குறித்த விவகாரங்கள் மீண்டும் வெடிக்கும் " என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள் தரப்பினர்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications