சுவிட்சர்லாந்து முதலீட்டு பாதுகாப்பில் தட்டி தூக்கிடுச்சே.. இந்தியாவுக்கு வந்த நிலைமை பார்த்தீங்களா
பெர்ன் (சுவிட்சர்லாந்து): முதலீட்டாளர்களின் பணத்திற்கு எந்த நாடு பாதுகாப்பானது என்ற புதிய உலகளாவிய லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் எப்போதும் போலவே அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஃபேமஸ் ஆன சுவிட்சர்லாந்து நாடு முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. ஆனால், வளர்ந்து வரும் பொருளாதார நாடான நம்முடைய இந்தியா இந்த லிஸ்ட்டில் எந்த இடம் பிடித்துள்ளது தெரியுமா? அதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகள் உலகளவில் நிலவி கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவில், முதலீட்டாளர்கள் தங்களின் மூலதனத்தை எந்தெந்த நாடுகளில் பாதுகாப்பாக முதலீடு செய்ய முடியும் என்பதற்கான புதிய தரவரிசை பட்டியல் ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை தந்துள்ளது.

முதலீடு பாதுகாப்பு
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் "ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ்" நிறுவனம், "ஆல்பா ஜியோ" என்ற உலகளாவிய தரவு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து "உலகளாவிய முதலீட்டு அபாயம் மற்றும் பின்னடைவு குறியீடு 2026" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்ட்டில் நம்முடைய இந்தியா முதல் 50 இடங்களுக்குள் கூட இடம்பெறவில்லையாம்..
54.4 புள்ளிகளுடன் 104-வது இடத்திற்குப் பின்தங்கியுள்ளது... இந்தத் தரவரிசைதான் பொருளாதார வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுவிட்சர்லாந்து மூலதனம்
பொதுவாக ஒரு நாட்டில் முதலீடு செய்யும்போது அங்கிருந்து கிடைக்கக்கூடிய லாபத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.. ஆனால் இந்த குறியீடு லாபத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, உலக அளவில் ஏதாவது பெரிய பிரச்சினையோ அல்லது அரசியல் குழப்பங்களோ ஏற்படும்போது, அந்த நாடு எவ்வளவு வேகமாக அதிலிருந்து மீண்டு வந்து முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாக்கிறது என்பதை வைத்துத்தான் புள்ளிகளை வழங்கியிருக்கிறார்கள்.
நாட்டின் அரசியல் சூழல் + பணத்தின் மதிப்பு + அரசாங்கத்தின் கொள்கைகள் என முக்கிய காரணிகளை ஆராய்ந்து 100 புள்ளிகளுக்கு இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியா 104வது நாடு
ஆனால் இந்தியா எதுக்காக 104-வது இடத்துக்கு போனது? இதற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவில் இருக்கும் விலைவாசி உயர்வு சவால்கள், இந்திய ரூபாயின் மதிப்பில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சில அரசு நடைமுறைகள் மற்றும் சட்ட விவகாரங்களில் ஏற்படும் காலதாமதம் போன்ற காரணங்களால்தான் இந்தியாவின் புள்ளி சரிந்து, 54.4 புள்ளிகளுடன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்கா கூட, அங்குள்ள அரசியல் மற்றும் நிதிச் சூழல் காரணங்களால் 24-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பது இதில் கவனிக்கத்தக்க விஷயம். ஒரு நாட்டின் சந்தை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உள்நாட்டு நிலைமை சீராக இருந்தால்தான் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது.
உலகின் முதலீட்டு பாதுகாப்பு நாடு
அப்படியென்றால் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா? எப்போதும் போல அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெயர்போன சுவிட்சர்லாந்து நாடுதான் 88.4 புள்ளிகளுடன் உலகிலேயே முதலீடு செய்ய மிக பாதுகாப்பான நாடாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்குள்ள நிலையான ஆட்சி முறையும், தெளிவான நிர்வாகமுமே அதற்கு முதல் இடத்தை தேடித்தந்துள்ளது.
சுவிட்சர்லாந்தை தொடர்ந்து டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த லிஸ்ட்டில் முதல் 10 இடங்களில் 9 இடங்களை ஐரோப்பிய நாடுகளே அள்ளிக்கொண்டு போயிருக்கின்றன.
டாப் 50 லிஸ்ட்
நமக்கு அருகிலுள்ள ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் 4-வது இடத்தைப் பிடித்து ஆசியாவின் மிக பாதுகாப்பான முதலீட்டு நாடாக மாறியுள்ளது. சிங்கப்பூரைத் தவிர ஹாங்காங், தென் கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா போன்ற மற்ற ஆசிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வந்துவிட்டன.
இந்த ஆய்வு முடிவுகள், சர்வதேச சந்தையில் தற்போது முதலீட்டாளர்கள் எதை முக்கியமாக கவனிக்கிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஒரு நாடு எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும், அங்கு நிலையான கொள்கைகளும், நல்ல நிர்வாகமும் இருந்தால்தான் முதலீட்டாளர்களின் பணத்தைப் பாதுகாக்க முடியும் என்பதைதான், இந்த ரிப்போர்ட் உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது...!!!












Click it and Unblock the Notifications