விராலிமலை இடைத்தேர்தலில் விஜயபாஸ்கர் போட்டியா? பர்வேஸ் கொடுத்த பதிலால் ஷாக்கான ஆதரவாளர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டசபை இடைத்தேர்தலில் சி.விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் பர்வேஸ் பதிலளித்துள்ளார்.
அதிமுக முன்னாள் சி.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக வென்றார். எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி + திமுகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது உள்ளிட்டவைகளை ஏற்க மனமின்றி அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

ஏற்கெனவே அதிமுக எம்எல்ஏக்கள் எஸ்பி வேலுமணி தலைமையில் தனி குழுவாக செயல்பட்ட போது அதில் இருந்த சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தவெக அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இதனால் விஜயபாஸ்கர் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ விஜய் முன்னிலையில் இணைய காத்திருந்த நிலையில் விஜய்யோ அதற்கு பிடிகொடுக்கவில்லையாம்.
இதனால் சி.விஜயபாஸ்கர், பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான இணைப்பு விழாவை நடத்தி அவர் இணைந்தார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பனையூர் தவெக அலுவலகத்திற்கு வந்த முதல்வர் விஜய்யை அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த மாஜிக்கள் சந்தித்து பேசினர்.
முதல்வர் தங்களுடன் அன்பாக பாசமாக பேசியது குறித்து சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் விவரித்து சிலாகித்தார். இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்த சி.விஜயபாஸ்கரை அமைச்சர் பர்வேஸ் வரவேற்றார்.
அப்போது விஜயபாஸ்கரின் காரில் தவெக கொடியை பொருத்தி, அவருக்கு தவெக துண்டையும் பர்வேஸ் அணிவித்துள்ளார். இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, விராலிமலை தொகுதியில் சி.விஜயபாஸ்கர் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு அதை முதல்வர் விஜய்தான் முடிவு செய்வார் என பர்வேஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை ஆர்.பி.உதயகுமார், முனுசாமி உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்தனர். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, விஜயபாஸ்கர் பதிலளிக்கையில், "நான் அதிமுகவில் இருந்த போது இவர்கள் எல்லாம் என்னை விமர்சித்தனரா? இல்லையே! எனவே ஒரு அத்தியாயம் முடிந்து புது அத்தியாயம் தொடங்கும் போது இது போன்ற விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதற்கெல்லாம் பதில் கொடுக்க முடியாது என்றார்.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் தவெகவுக்கு வருவதால் தங்களுக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் பல அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் சி.விஜயபாஸ்கரின் வருகையால் பர்வேஸ் சற்று அதிர்ச்சி அடைந்தார். எனினும் தற்போது இருவரும் இணக்கமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications