பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்! ஸ்டார் 3.0 மூலம் இனி ஒரு பத்திரத்திற்கு ரூ.30,000 மிச்சம்
சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்யும்போது லஞ்சம் கேட்கப்படுவதைதடுக்க, நம்முடைய தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் மக்கள் தங்களது பத்திரங்களை எப்படிப் பதிவு செய்வது என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பதிவுத்துறை அலுவலர்கள் சங்கமே நேரடியாக தொடங்கியிருக்கிறது.. இதுதான் பொதுமக்களின் கவனத்தை தற்போது ஈர்த்து வருகிறது.
சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும், அல்லது சிறிது நிலமாவது வாங்கிவிட வேண்டும் என்பதுதான் பலரது வாழ்நாள் கனவாகவே உள்ளது.. ஆனால் பாடுபட்டு பணம் சேர்த்து பத்திரப்பதிவு செய்யப் போனால், அங்கே சார்-பதிவாளர் ஆபீஸ்களில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமை இருப்பதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன..

அதாவது ஆவண எழுத்தர்கள், புரோக்கர்கள் மூலமாக இந்த லஞ்ச வசூல் மறைமுகமாக நடந்து கொண்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்..
பத்திரப்பதிவு துறை
இப்போது தமிழகத்தில் விஜய் தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சத்தை மொத்தமாகவே ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, பத்திரப்பதிவு செய்ய வரும் மக்களிடம் அதிகாரிகள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களை உட்கார வைத்துப் பேச வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் யாருக்கும் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் தங்களது பத்திரப்பதிவை எப்படி செய்வது என்பது குறித்த புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பதிவுத்துறை அலுவலர்கள் சங்கமே தொடங்கியுள்ளதாம்.. இதுகுறித்து அந்த சங்கத்தின் நிர்வாகிகள் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளனர்.
சார் பதிவாளர்கள் - பதிவுத்துறை
அதில், "கடந்த சில வருடங்களாகவே சார்-பதிவாளர்கள் தங்களுக்கு வேண்டிய இடங்களுக்கு டிரான்ஸ்பர் கேட்க வேண்டுமானால், பல மட்டங்களில் பெரிய தொகையை லஞ்சமாக கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய புதிய நடைமுறையால், சமீபத்தில் 132 சார்-பதிவாளர்களுக்கு எந்தவிதமான பண பரிமாற்றமும் இல்லாமல், முற்றிலும் லஞ்சமே இல்லாமல் டிரான்ஸ்பர் வழங்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு நேர்மையான முறையில் இடமாறுதல் கிடைத்துள்ளதால், அலுவலர்களும் பணியாளர்களும் மக்களிடம் எந்த காரணத்தைக் கொண்டும் லஞ்சம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் டோக்கன் - லஞ்சம் தராதீங்க
இதனிடையே, பொதுமக்களும், தங்களின் பத்திரப்பதிவைச் சுமுகமாக முடிக்கச் சில வழிமுறைகளை பின்பற்றுமாறு பதிவுத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். முதலாவதாக, பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற தப்பான எண்ணத்தை மக்கள் முதலில் கைவிட வேண்டும். சட்டப்பூர்வமான வழிமுறைகளை சரியாக ரூல்ஸ்படி பின்பற்றினாலே வேலை எளிதாக முடியும்.
ஆன்லைனில் டோக்கன் வாங்கி, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு தாமதமில்லாமல் சார்-பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.
ஸ்டார் 3.0 சாப்ட்வேர் வசதிகள்
அதேபோல், தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் கொஞ்சமாவது கால அவகாசம் கொடுக்க வேண்டும். தேவையில்லாமல் அவசரப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிலும், பதிவுத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்டார் 3.0 (STAR 3.0) சாப்ட்வேர் டெக்னாலஜி வழிமுறைகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள பழக வேண்டும்" என்றெல்லாம் என்று சங்க நிர்வாகிகள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கிரைய பத்திரம்
இந்த மாற்றங்கள் குறித்து தேசிய ரியல் எஸ்டேட் வளர்ச்சி கவுன்சிலின் தமிழகப் பிரிவுத் தலைவர் பி. மணிசங்கர் சொல்லும்போது, அரசின் உத்தரவுகள் காரணமாக, இப்போது பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணம் கேட்டு மக்களை வற்புறுத்துவது கணிசமாக குறைந்துள்ளது. முக்கியமாக, அபார்ட்மெண்ட் வீடு வாங்குபவர்கள் தங்களது கிரையப் பத்திரத்தைப் பதிவு செய்யும் போது லஞ்சம் தவிர்க்கப்பட்டால், ஒரு பத்திரத்திற்கு மட்டுமே குறைந்தபட்சம் 30,000 ரூபாய் வரை மக்களுக்கு மிச்சமாகும்.
நடுத்தர மக்களுக்கு இது பெரிய நிம்மதியை தரும் என்பதால், இந்த லஞ்சமில்லா சூழல் தொடர்ந்து நீடிப்பதை அரசு மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications