விதம் விதமான சீருடை - ஏழைகள் மீது சுமையை ஏற்றும் அரசுப் பள்ளி!
செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஒரு அரசுப் பள்ளி, தனியார் பள்ளிக் கூடங்களைப் போலவே மாணவிகளிடம் விதம் விதமான சீருடைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் நிதிச் சுமையை ஏற்றி வருவதாக மக்கள் குமுறுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஏராளமான அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகள் இருபாலர் பள்ளிகளாகத்தான் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம்மாவட்டத்தில் தென்காசி கல்வி மாவட்டத்தில் செங்கோட்டையில் செயல்பட்டு வரும் எஸ்ஆர்எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிதான் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பெரிய பள்ளி.
பல முறை மாநில அளவில் இப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றுள்ளனர். சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த இப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளன.
மொத்தம் சுமார் 3000 ஆயிரம் மாணவிகள் படித்து வரும் இப்பள்ளிதான் நெல்லை மாவட்டத்தின் கிராமப்புற மாணவிகளின் கல்வியறிவை ஊக்கப்படுத்தும் பள்ளி என்பதும், மாவட்டத்திலேயே அதிக பெண்கள் பயிலும் பள்ளியாகவும் ஆகும்.
இப்பள்ளியில் 6ம் வகுப்பில் 5 பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவில் தலா 50 மாணவிகளும், 7ம் வகுப்பில் 5 பிரிவுகளில் அதிகபட்சமாக 80 மாணவிகள் ஒரு வகுப்புக்கு உள்ளனர். 8ம் வகுப்புக்கு 5 பிரிவுகள் உள்ளது. இதில் தலா 50 மாணவிகளும் 9ம் வகுப்பில் 7 பிரிவுகளும் இதில் தலா ஒரு பிரிவில் 70 மாணவிகள் உள்ளனர். 10ம் வகுப்பில் 6 பிரிவுகள் உள்ளது. இதில் தலா ஒரு பிரிவில் 50-60 மாணவிகளும் உள்ளனர். பிளஸ் ஒன்னில் 8 பிரிவுகளும், பிளஸ் டூ-வில் 10 பிரிவுகளும் உள்ளன. இதில் சுமார் 800 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் முதன்முதலில் பாவாடை, தாவணி மட்டுமே சீருடையாக இருந்து வந்தது. அதன்பின் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சுடிதாராக பரிணாமம் பெற்றது.
அப்போதே பல பெற்றோர் ஒரு செட் சுரிதாருக்கு ரூ.500 வரை செலவு செய்துள்ளனர். தலா ஒரு மாணவிக்கு 2 செட் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது 6 முதல் 10ம் வகுப்பு வரை ஒரு கலர் சீருடை. இதில் தனியார் பள்ளியைப் போல மாணவிகளுக்கு கோட் எக்ஸ்ராவாக, சேர்த்து புதிய சீருடையை அறிமுகம் செய்துள்ளனர். பிளஸ் ஒன் மாணவிகளுக்கும் அதே போல் வேறு கலர். இந்தாண்டு பிளஸ் டூ மாணவிகளுக்கு மட்டும் அந்த சீருடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பள்ளி தற்போது அறிமுகப்படுத்தியுள்ள புதிய சீருடை ஒரு செட்டுக்கு சுமார் 500 முதல் 750 ரூபாய் வரை ஆகிறது என்றும், ஒரு மாணவிக்கு கட்டாயம் 2 செட் தேவைப்படும் என்றும் இதற்காக ஏற்கனவே டியூஷன் பீஸ், நோட் புக் பீஸ் என பல்வேறு சுமைகளை சுமக்கும் பெற்றோர் கூடுதல் சுமையை சுமக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இப்பள்ளி சீருடைகள் குறிப்பிட்ட கடைகளில் கிடைப்பதால் அங்கு மட்டுமே வாங்க வேண்டியுள்ளது. தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பல பெற்றோர் கடன் கொடுக்கும் கந்து வட்டிக்காரர்களை தேடி போவதைபோல அரசு பள்ளியும் ஏழைப் பெற்றோரை வேதனையின் விளிம்பில் தள்ளியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தனியார் பெறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரிகளின் கட்டணங்களுக்கு கடிவாளம் போடுவதாக கூறும் கல்வித்துறை அரசு பள்ளியின் இந்த அதிரடி செயலை எப்படி தடுக்கப் போகிறது என்று மக்கள் கேட்கின்றனர்.
கூடுதல் கட்டணத்தை வசூல் செய்வது மட்டும் சட்டவிரோதமானதல்ல, இப்படி விதம் விதமான சீருடை என்ற பெயரில் ஏழை எளியவர்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும் கூட ஒரு வகையில் சட்டவிரோதம்தான்.
அரசுப் பள்ளிகளில் ஏழை, எளியவர்கள்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள். அப்படிப்பட்ட பள்ளியில் நடைபெறும் இந்த செயல் குறித்து தமிழக கல்வித்துறை கண்டு கொள்ளுமா..?