பாஜக பொதுச் செயலாளர் பதவி-அருண் ஜேட்லி ராஜினாமா

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. இதற்கு யாரும் பொறுப்பேற்காமல் அமைதி காத்தனர். இதன்மூலம் தோல்விக்குக் காரணமான மூத்த தலைவர்கள் தப்ப முயன்றனர்.
அத்தோடு பிரச்சாரத்தை முன்னின்று நடத்திய மூத்த தலைவர்களான அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் பதவி, மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் பதவி, நாடாளுமன்ற கட்சித் தலைவர் பதவி ஆகியவை வழங்கப்பட்டன.
இதற்கு அந்தக் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தோல்விக்குக் காரணமான இந்த மூன்று தலைவர்களும் முக்கிய பதவிகளை எடுத்துக் கொண்டதை ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் ஆகியோர் ஏற்கவில்லை.
முதலில் எதி்ர்க் கட்சித் தலைவர் பதவி தனக்கு வேண்டாம் என்று கூறிய அத்வானி பின்னர் அதை ஏற்றுக் கொண்டதோடு தனது ஆதரவாளர்களான ஜேட்லி, சுஷ்மாவுக்கும் முக்கிய பதவிகள் தந்தார்.
இதன்மூலம் தோல்விக்கு கட்சியல் பரிசு தரப்பட்டுள்ளதாகவும், தோல்வி குறித்துப் பேசாமல் அமைதி காக்க சதி நடப்பதாகவும் யஷ்வந்த் சின்ஹா பரபரப்புக் குற்றம் சாட்டினார். மேலும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.
அதே போல ஜஸ்வந்த் சிங்கும், முரளி மனோகர் ஜோஷியும் அத்வானி கோஷ்டிக்கு எதிராக வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக பிரச்சாரம், வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் முழு ஆதிக்கம் செலுத்திய ஜேட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரி வருகின்றனர்.
தனக்கு எதிர்ப்பு அதிகமாவதை உணர்ந்த ஜேட்லி தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடிதத்தை ராஜ்நாத் சி்ங்குக்கு அவர் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
இத்தோடு பாஜகவி்ல் சிக்கல் தீராது என்றே தெரிகிறது. மேலும் பல தலைவர்களின் தலையும் உருளலாம்.












Click it and Unblock the Notifications