விஞ்ஞானி மகாலிங்கத்தின் உடல்தானா? குடும்பத்தினர் சந்தேகம் - டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு கோரிக்கை
கார்வார்: காளி ஆற்றில் மீட்கப்பட்ட உடல் விஞ்ஞானி மகாலிங்கத்தின் உடல் தானா என்பதில் சந்தேகம் எழுந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். எனவே இதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி மகாலிங்கம். இவர் சமீபத்தில் காணாமல் போனார். இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில், மகாலிங்கம் தங்கியுள்ள குடியிருப்புக்கு சற்று தொலைவில் ஓடிக் கொண்டிருக்கும் காளி ஆற்றங்கரையோரத்தில் அழுகிய நிலையில் உடல் ஒன்று மீட்கப்பட்டது.
அது மகாலிங்கத்தின் உடல்தான் என்று குடும்பத்தினுரம், அவருடன் பணியாற்றியவர்களும் உறுதிப்படுத்தினர். மகாலிங்கத்தின் மோதிரம் உள்ளிட்டவற்றை வைத்து உடல் அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் மகாலிங்கத்தின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்டது மகாலிங்கத்தின் உடல்தானா என்ற சந்தேகத்தை அவரது குடும்பத்தினர் எழுப்பியுள்ளனர்.
இதையடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மகாலிங்கத்தின் சகோதரர் இந்திரஜித் போலீஸில் மனு கொடுத்தார்.
இதையடுத்து மகாலிங்கத்தின் தாயாரிடமிருந்து ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இது டிஎன்ஏ சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.