சுற்றுலாவுக்கு சிறந்த இடம் இலங்கை - இந்தியா பிரசாரம்
கொழும்பு: இலங்கைக்கு சீன சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் இழுக்க இந்தியா பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளதாம்.
இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில், இலங்கையை மேம்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, கிட்டத்தட்ட அந்த நாட்டின் பி.ஆர்.ஓ போல தற்போது மாறி விட்டது.
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் இலங்கைக்காக பிரசாரம் செய்யவுள்ளதாம் இந்தியா.
குறிப்பாக சீனப் பயணிகளை அதிக அளவில் இலங்கைக்கு இழுக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளதாம்.
இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த பணியில், இலங்கையின் சுற்றுலாத்துறையை மட்டுமல்லாமல் இந்திய சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த் மொறகொட மற்றும் சீனாவுக்கான இந்தியத் தூதர் நிரூபமா ராவ் ஆகியோர் பேசி வருகின்றனர். நிரூபமா ராவ் ஏற்கனவே இலங்கையில் இந்தியத் தூதராக இருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
சுற்றுலாப் பயணத்துறைக்கு இலங்கை சிறந்த இடம் என்ற பிரச்சாரத்தை இந்தியா முன்னெடுக்கப் போவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.