மூளைச்சாவு-சாப்ட்வேர் என்ஜினியர் உடல் தானம்
சென்னை: சென்னையில் நடந்த விபத்தில் மூளைச் சாவை சந்தித்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட.
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் வடக்கு தெருவை சேர்ந்த சிங்காரமணி (24) சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இம் மாத ஆரம்பத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
இவரது தந்தை பாஸ்கர் மற்றும் தாயார் செந்தமிழ் செல்வி ஆகியோர் கும்பகோணத்தில் வசித்து வருகின்றனர்.
நேற்றிரவு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் பைக் அவர் மீது மோதியது. அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுய நினைவை இழந்தார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்ப்டடது. இந்நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பாததை அடுத்து மேல்சிகிக்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரது உடலை தானம் கொடுக்க முன் வந்தனர். அவரது ஒரு சிறுநீரகமும், நுரையீரலும் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதயம் பிரண்டியர் லைப்லைன் மருத்துவமனைக்கும், கண்கள் இரண்டும் அகர்வால் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து மூளைச்சாவு அடைந்த சிங்காரமணியின் தந்தை பாஸ்கர் கூறுகையில்,
கடந்த வாரம் தான் எனது மகன் சென்னைக்கு வந்தான். இந்த வாரம் அவனை உயிரோடு பார்க்க முடியவில்லை. என் மகனின் உறுப்புகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என டாக்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். 24 ஆண்டுகளாக வளர்ந்த பிள்ளையை பறிகொடுத்து நிற்கிறோம் என்றார்.