அவதூறு வழக்கு-ஜெவுக்கு எதிராக தயாநிதி வாக்குமூலம்
சென்னை: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தன்னை பற்றி அவதூறு பேசியதாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்ற நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார்.
விருதுநகர் மற்றும் சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் ஜெயலலிதா தன் மீது அவதூறாக குற்றச்சாட்டு பரப்பி வருவதாக தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தயாநிதி மாறன் நேரில் ஆஜராகி நீதிபதி சேதுமாதவன் முன்பு வாக்குமூலம் கொடுத்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
மத்திய சென்னை தொகுதியில் இரண்டாவது முறையாக எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் பதவியை பெற்றுள்ளேன்.
முன்பு தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்து மக்களின் நன்மதிப்பை பெற்றேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் கிடையாது. இந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏப்ரல் 23ம் தேதி விருதுநகர் பொது கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா என் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கத்தில் பேசியுள்ளார்.
என் வீட்டில் தனி தொலைபேசி இணைப்பகம் வைத்து முறைகேடு செய்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து அடுத்த நாளே நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு பிறகும் அவர் மே 10ம் தேதி அன்று சென்னையில் தேர்தல் பிரசார கூட்டத்தில் அதே குற்றச்சாட்டை கூறினார்.
நான் எந்த தவறும் செய்யவில்லை என்று பிஎஸ்என்எல் உயர் அதிகாரிகளே விளக்கம் அளித்துள்ளனர். அதன்பிறகும் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு ஜெயலலிதா என் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தயாநிதி மாறன்.
அவரது வாக்குமூலத்தை கேட்ட நீதிபதி வழக்கை ஜூலை 1ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.