ராகிங் செய்தவருக்கு முன் ஜாமீன் மறுப்பு
சென்னை: ராகிங் வழக்கில் தேடப்பட்டு வரும் மாணவருக்கு முன் ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதி மன்றம் மறுத்துவிட்டது.
கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் கடந்த மார்ச் மாதம் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை, மூத்த மாணவர்கள் சிலர் ராகிங் செய்தனர். அப்போது அவர்கள் முதலாம் ஆண்டு மாணவரை தங்களது கால்களில் கிடக்கும் ஷூவை நாக்கால் துடைக்கும்படி கூறியுள்ளனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த முதலாம் ஆண்டு மாணவரை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அந்த மாணவனுக்கு கண், முதுகுதண்டு உள்ளிட்ட உடலின் பல இடங்களில் கடும் காயம் ஏற்பட்டது. அந்த மாணவரின் கண்பார்வையும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மாணவர் கடந்த மார்ச் 7ம் தேதி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சில மாணவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தேடப்பட்டு வரும் மாணவர்களில் ஒருவரான அர்ஜூன் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ரகுபதி அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என கூறி மறுத்துவிட்டார்.
நீதிபதி தனது தீர்ப்பில்,
தமிழகத்தில் ராகிங் கொடுமைகளை தடுக்க தடை சட்டம் மற்றும் பல அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்றாலும் ராகிங் என்ற பெயரில் சீனியர் மாணவர்கள், ஜூனியர்களிடம் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொள்ளும் போக்கு இன்னும் முற்றிலுமாக அளிக்கப்படவில்லை.
அவர்கள் தாங்கள் படித்த கல்வியை, அறிவையும் நல்ல விதத்தில் பயன்படுத்த தவறி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு கல்வி மற்றும் அறிவை போதிப்பதுடன் நின்றுவிட கூடாது. அவர்களுக்கு ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும் கற்று கொடுக்க வேண்டும். அவர்களை பண்புள்ள மனிதராக மாற்ற வேண்டும்.
தற்போது இந்த வழக்கில் மூத்த மாணவர்கள் சிலர் விஷமத்தனமாக செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் மனித குணம் இல்லாமல் நடந்து கொண்டுள்ளனர். கொடூர மிருகங்களை போல் ஜூனியர் வீரர்களை தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் அந்த மாணவருக்கு முன் ஜாமீன் வழங்கினால், அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். ராகிங் செய்ய துண்டும் விதமாக மாறிவிடும். ராகிங் குற்றங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. நீதிமன்றமும் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளாது.
இந்த வழக்கில் மெத்தனமாக நடந்து கொண்டவர்களை இந்த நீதிமன்றம் கண்டிக்கிறது. முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பம் செய்தவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்.
இந்த வழக்கில் சீனியர் மாணவர்கள் செய்த குற்றத்துக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றார் நீதிபதி ரகுபதி.