தேமுதிகவினால் அதிமுக கூட்டணி தோற்றது-நல்லக்கண்ணு
வத்தராயிருப்பு: மக்களவைத் தேர்தலில் தேமுதிக இல்லாமல் இருந்திருந்தால் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவி்த்துள்ளார்.
வாக்களார்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் வத்தராயிருப்பில் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லகண்ணு கலந்து கொண்டு பேசுகையில்,
ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ரூ. 25 லட்சத்துக்கு மேல் செலவழிக்கக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 40 கோடி வரை ஒரு சில கட்சிகள் செலவழித்துள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்க சென்னையில் ரூ. 27 கோடியும், விருதுநகரில் வைகோவைத் தோற்கடிக்க ரூ. 21 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
பணபலம், அதிகாரப் பலத்தையும் தாண்டித்தான் தென்காசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
அதிமுக கூட்டணிக்கு ஒரு கோடியே 15 லட்சம் ஓட்டுகளும், திமுக கூட்டணிக்கு ஒரு கோடியே 31 லட்சம் ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இரு தரப்புக்கும் இடையே 16 லட்சம் ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம்.
ஆனால், 40 தொகுதிகளிலும் தேமுதிக 31 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளது. அவர் ஏதாவது கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் அந்தக் கட்சியாவது வெற்றி பெற்றிருக்கும்.
தேமுதிக இல்லாமல் இருந்திருந்தால், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கும். தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதற்காக சோர்ந்து விடமாட்டோம்.
கம்யூனிஸ்ட்கள் இல்லை என்றால், நாட்டில் மக்களைப் பற்றிச் சிந்திக்க நாதியற்ற நிலை தான் ஏற்படும் என்றார்.












Click it and Unblock the Notifications