தினமும் மாயமாகும் 30 ஈழத் தமிழர்கள்!
கொழும்பு: இலங்கையில் அகதிகள் முகாம்களில் தினமும் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் மாயமாகிவிடுகின்றனர். ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் இவர்கள் திரும்பவுதில்லை என ஆசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் நடந்த இனப்போரில் ராணுவம் அப்பாவி தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. தற்போது போர் முடிந்த நிலையில் வடக்கு இலங்கையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் அடிப்படை வசதிகள் கூட சரிவர கிடைக்கவில்லை. ஒருவர் தங்க கூடிய இடத்தில் 10க்கும் மேற்பேட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நிலைமை குறித்து பல்வேறு நாட்டை சேர்ந்த அமைப்புகளும் வருத்தம் தெரிவித்து வருகிறது. ஆனால், யாராலும் ஈழத் தமிழர்களின் இதயத்தில் வழியும் ரத்தத்தை துடைக்க முடியவில்லை.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தினர் விடுதலை புலிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்களா என சோதனையிடுகிறேன் என கூறி கொண்டு அங்கிருக்கும் தமிழ் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர்.
முதலை வாயுக்குள் சென்ற ஆடாக விசாரணைக்கு சென்றவர்கள் இதுவரை திரும்பி வந்ததில்லை என முகாம்களில் இருப்பவர்கள் சோகமாக தெரிவித்து வருகின்றனர்.
இதை ஆசிய மனித உரிமை ஆணையமும் உறுதி செய்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
இலங்கை ராணுவம் தினமும் விடுதலை புலிகளுக்கு தொடர்பு உள்ளவர்கள் என கூறி பலரையும் அழைத்து செல்கிறது. ஆனால், அவர்கள் திரும்பி வருவது இல்லை. அவர்கள் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஒரு நாளைக்கு 30க்கம் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் இருந்து காணாமல் போகிறார்கள்.
இதனால் முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இலங்கை அரசு முகாம்களில் இருப்பவர்களை எண்ணி, பதிவு செய்ய வேண்டும். முகாம்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications