எஸ்.வி.சேகரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏ!

அதிமுகவினரின் கடும் எதிர்ப்புக்கிடையே இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஸ்டாலினை அதிமுக உறுப்பினர் எஸ். வி.சேகர் வாழ்த்திப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையி்ல், ஒரு அரசியல் நாகரீகத்துக்காகத்தான் துணை முதல்வருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன். நான் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று தான் இந்த சபைக்கு வந்தேன். இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.
மாற்றுக் கட்சியினர் பேசக்கூடாது என்றால் அது மக்களுக்கு செய்யும் துரோகமாகத்தான் இருக்கும். துணை முதல்வரை பாராட்டுவதால் என்னை 'துரோகி' என்று சொல்வது சரியல்ல.
(அதிமுக) உறுப்பினர் கலைராஜன், “அடுத்து நீ பேசினால் போட்டு விடுவேன்" என்று கூறுகிறார். சட்டத்தை மதிக்க வேண்டிய சட்டசபையிலேயே இப்படி சொல்கிறார். எனவே எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
எனது உயிருக்கோ, உடமைகளுக்கோ ஏதாவது நடந்தால் அதற்கு யார் காரணம் என்பதை இந்த சட்டசபையில் நான் பதிவு செய்கிறேன். நான் வாழ்த்து மட்டும் சொல்ல விரும்பினேன். துணை முதல்வர் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
என்னுடைய தலைவி ஜெயலலிதா இப்படியெல்லாம் சொல்லி இருக்க மாட்டார். சிலர் ஆர்வ கோளாறு காரணமாக இப்படி இங்கே பேசியிருக்கலாம். நான் எப்படி இங்கு நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு யாரும் ஆலோசனை வழங்கவில்லை என்றார் எஸ்.வி.சேகர்.
எட்டப்பன், பன்றிக் காய்ச்சல், படார்..
இதையடுத்து எரிசக்தி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது அதிமுக எம்எல்ஏ கலைராஜன் குறுக்கிட்டு,
இங்கு பேசிய 'எட்டப்பன்' எஸ்.வி.சேகர் நாளை பன்றிக் காய்ச்சலால் “படார்" என்று போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றார்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பாமகவைச் சேர்ந்த ஜி.கே.மணி, வேல்முருகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் ஆகியோர் எழுந்து எஸ்.வி. சேகர், கலைராஜன் ஆகிய இருவருடைய பேச்சையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றனர்.
சேகருக்கு பாதுகாப்பு தர வேண்டும்..
ஆனால் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் எழுந்து, எஸ்.வி.சேகர் ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். அதற்கு கலைராஜன் பதில் சொல்லி விட்டார். எனவே அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி பேசுகையி்ல் எஸ்.வி.சேகர் அதிமுகவினரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என்பதையும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதையும் இந்த அவையில் பதிவு செய்திருக்கிறார். அவருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது சபாநாயகரின் கடமை என்றார்.
அடுத்துப் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், முதலில் உறுப்பினர் கலைராஜன் இருக்கையை விட்டு எழுந்து இங்கு வந்ததே தவறு. இருவர் பேசியதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications