பரஸ்பரம் மன்னிப்புக் கேட்ட அத்வானி-பிரதமர்!
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தின்போது என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதற்காக அத்வானி என்னிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுவிட்டார். அதே போல அவரை நான் புண்படுத்தியிருந்தால் மன்னிக்குமாறு நானும் பதிலுக்குக் கேட்டு்க் கொண்டேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்
தனது மூன்று நாள் ரஷ்யப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று டெல்லி திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங் விமானத்தில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
பாகிஸ்தானில இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத சக்திகளை ஒடுக்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி என்னிடம் மேலும் கால அவகாசம் கோரியுள்ளார்.
தலிபான்களை ஒடுக்கியது போல இவர்களையும் ஒடுக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். இந்தியாவுக்கு எதிரான களமாக பாகிஸ்தானை பயன்படுத்த விட மாட்டேன் என்று அவர் உறுதியளித்தார்.
இம்மாத இறுதியில் இந்திய-பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரிகள் கூடி தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இனி பாகிஸ்தானின் செயல்பாட்டை வைத்தே நின்று போன இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை முழு அளவில் தொடரும்.
கடந்த மாதம் 16ம் தேதி தேர்தலில் வென்றதற்காக தொலைபேசியில் பேசிய பாஜக தலைவர் அத்வானி தேர்தல் பிரச்சாரத்தின்போது என்னை தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தார். நானும் உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டும் என்று நானும் கேட்டுக் கொண்டேன் என்றார் பிரதமர்.
முன்னதாக ரஷ்யாவின் யேகடரின்பர்க் நகரில் நடந்த ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்ற பிரதமர் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியையும் சந்தித்தார்.
அப்போது இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சதித் திட்டங்கள் பாகிஸ்தான் மண்ணில் நடக்க கூடாது. இது தான் இந்திய மக்களின் விருப்பம். அதை உங்களிடம் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
அப்போது அங்கு டிவி, தொலைகாட்சி நிருபர்களும் இருந்ததால் சர்தாரிக்கு தர்மசங்கடமாகிவிட்டது. உடனே நிருபர்கள் சென்றவுடன் பேசலாமே என்று சர்தாரி கூறினார்.
இதன் பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி கூறுகையில், தீவிரவாதம் பாகிஸ்தானுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஹபீல் சையத் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற பரிசீலனைக்கு கோரிக்கை விடுக்க இருக்கிறோம். மும்பை தாக்குதல் குற்றவாளிகளை பிடிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications