சீன மொபைல்கள், பொம்மைகள் இறக்குமதிக்குத் தடை

இதனால் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடுமையான மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை அழிக்கும் வகையில் இந்த இறக்குமதி அமைந்துள்ளதாகவும், அதைத் தவிர்க்கவும் இந்தத் தடையை விதித்துள்ளதாக இந்திய அயல் வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.
குறிப்பாக சீனாவிலிருந்து சர்வதேச அடையாளக் குறிப்பெண்கள் (International Mobile Equipment Identity) இல்லாமல் மாதத்துக்கு 8 லட்சம் மொபைல் போன்களுக்கும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இன்றும் 50 லட்சத்துக்கும் இத்தகைய போன்கள் புழக்கத்தில் உள்ளன.
இந்தப் போன்கள் தீவிரவாதிகள் மற்றும் சட்ட விரோத சக்திகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது. எனவே இவற்றை இறக்குமதி செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
அதேபோல வரும் 2010-ம் ஆண்டு வரை சீனாவிலிருந்து பொம்மை மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது இந்திய அயல் வர்த்தகத்துறை இயக்குநரகம்.
அதேநேரம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தின் அத்தாட்சியுடன் வரும் சீன பொம்மைகளை தடை செய்யவில்லை இந்திய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பால் பொருட்களில், கூடுதல் வெண்மை நிறத்துக்காக நச்சுத்தன்மை கலந்த ரசாயனம் உபயோகப்படுத்துவதால், அவற்றை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டே தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை வரும் ஜூன் 24-ம் தேதி காலாவதியாகிறது. இப்போது அந்தத் தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.
ப்ளாஸ்டிக் மற்றும் உரத்தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் சில வகை நச்சு ரசாயனங்களைப் பயன்படுத்தி சீனத்து பால் பொருட்கள் தயாரிக்கப்படுவதால், குழந்தைகளின் உயிருக்கே அவை உலை வைப்பதாகவும், சிறு நீரகக் கோளாறுகள் ஏற்படக் காரணமாக இருப்பதாகவும் சர்வதே மருத்துவ விஞ்ஞானிகள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்தியாவைப் போலவே மற்ற ஆசிய - ஆப்ரிக்க நாடுகளும் சீனாவின் பால் பொருட்களை தடை செய்துள்ளன. ஆனால் இலங்கை மட்டும் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்திலிருந்தே பால் பொருள் உற்பத்தியில் முதல் நிலையில் இந்தியா இருந்து வருகிறது. அதனால் சீனவாலிருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்யும் அவசியம் இந்தியாவுக்கு வந்ததில்லை. ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தடையை அறிவித்துள்ளது.
அடுத்து முக்கியமான தடை, சீனாவின் மருந்துகளுக்கு. சீன மருந்துகளை இந்தியாவில் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே போலி மருந்துகளைத் தயாரித்து ஆப்ரிக்க நாடுகளில் இந்தியாவின் பெயரில் மோசடியாக சீனா விற்பனை செய்ததை நைஜீரிய அரசே கண்டுபிடித்து தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசின் இந்த வெளிப்படையான தடை, சர்வதேச அரங்கில் சீனாவின் வர்த்தக இமேஜை பலமாக அசைத்து விட்டது. இதனால் சர்வதேச வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு எதிராக காய் நகர்த்தல்களை சீனா ஆரம்பித்துவிட்டது.
இந்திய பொருட்களுக்கு எதிரான லாபியை தனது நட்பு நாடுகளிடம் இப்போதே அந்த நாடு துவங்கி்யுள்ளது.












Click it and Unblock the Notifications