மோடி அரசு மசோதா- நிராகரித்தது மத்திய அரசு!
டெல்லி: குஜராத் மாநில அரசு கொண்டு வந்த தீவிரவாத எதிர்ப்பு சட்ட மசோதாவில் 3 திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அதை குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்து அனுப்ப முடியும் என மத்திய அரசு கூறி விட்டது.
இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு 2வது முறையாக நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் திட்டமிட்ட குற்றத் தடுப்பு கட்டுப்பாட்டுச் சட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு திருத்தங்கள் செய்தால் மட்டுமே ஏற்க முடியும் என கூறியுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தற்போது குஜராத் அரசு சமர்ப்பித்துள்ள மசோதாவில் - ஒரு குற்றவாளி, போலீஸ் அதிகாரி முன்பு அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலத்தை கோர்ட் ஏற்க முடியும் என்ற அம்சம் உள்ளது. இதை ஏற்க முடியாது.
அதேபோல, அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தால் கோர்ட்டால் ஜாமீன் வழங்க முடியாது என்று இன்னொரு அம்சம் உள்ளது. கோர்ட்டுக்குத்தான் ஜாமீன் வழங்குவதா, இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இருக்க வேண்டும். அரசு வக்கீலுக்கு அது இருக்க முடியாது. இதையும் திருத்த வேண்டும்.
அதேபோல இன்னொரு திருத்தத்தையும் நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்த 3 திருத்தங்களையும் குஜராத் அரசு மேற்கொண்டால், இந்த மசோதாவை மத்திய அரசு குடியரசு் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடியும் என்றார் சிதம்பரம்.
இதுகுறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு அரசியல் உள்நோக்கத்துடன் இந்த திருத்தங்களைக் கூறியுள்ளது. இந்த திருத்தங்களுக்குப் பின்னால் அரசியல்தான் உள்ளது. ஏன் தீவிரவாத எதிர்ப்பு விஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications