தமிழகர் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும்-விஜயகாந்த்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டுமென்று, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும், அங்குள்ள மனிதாபிமானிகளும் தங்களால் இயன்ற உதவி பொருட்களைச் சேர்த்து 'மெர்சி மிஷன்' என்ற கப்பல் மூலம் அவசர உதவியாக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏப்ரல் 22ம் தேதியே சிங்கள அரசுக்குத் தகவலும் தந்துள்ளனர். மேலும் மே மாதம் 27ம்தேதி சிங்கள அரசின் அமைச்சரை ஜெனீவாவில் நேரில் சந்தித்தும் பேசியுள்ளனர்.
இருப்பினும் லண்டனிலிருந்து வந்த இந்த நிவாரணக் கப்பல் இலங்கையை நெருங்கியபோது அது சிங்கள கடற்படையினரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.
இலங்கையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 53,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மிச்சமுள்ள தமிழர்களையும், பட்டினி போட்டு சாகடிக்க ராஜபக்சே நடத்தும் சூழ்ச்சியே இது.
ஆகவே தமிழக அரசு இதில் தலையிட்டு இந்திய அரசின் மூலம் நடுக்கடலில் நிற்கும் நிவாரண கப்பலை இந்திய துறைமுகத்துக்குக் கொண்டு வந்து உணவு, மருந்து பொருட்களை இறக்க வசதி செய்து கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
பிறகு அதை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு இந்திய தூதரின் மேற்பார்வையில் வினியோகிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
முகாம்களில் திறந்தவெளி சிறைச் சாலையை விட மோசமான நிலைமையில் அடைபட்டு கிடக்கும் தமிழர்கள் உணவு மற்றும் சுகாதார வசதியில்லாததால் தினந்தோறும் செத்து மடிகிறார்கள்.
இதைத் தவிர்க்கும் வகையில் இலங்கையிலுள்ள தமிழ் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்றும், தமிழர்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்ல வழிவகை காண வேண்டுமென்றும் சிங்கள அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.