ரயிலில் சீட்கள் மாயம்-டெல்லி டூ நெல்லைக்கு 2 நாள் நின்றபடி வந்த பயணி
நெல்லை: டெல்லியிலிருந்து நெல்லைக்கு வரும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் இருக்கைகள் இல்லாததால், முன்பதிவு செய்த பயணிகள் 2 நாட்களாக நின்றபடி பயணம் செய்து வந்துள்ளனர்.
டெல்லியில் இருந்து குமரிக்கு சனிக்கிழமை தோறும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் மூலக்கரைபட்டி ஆழ்வாநேரி கிராமத்தை சேர்ந்த பாதிரியார் ரத்தினம் மற்றும் மூலக்கரை பட்டி பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் குடும்பத்துடன் மூன்றாம் வகுப்பு பெட்டியில் கடந்த 13ம் தேதி டெல்லியில் இருந்து நெல்லைக்கு பயணம் செய்தனர்.
இது குளிர்சாதன பெட்டி.
ஆறுமுகம், ரத்தினம் இருவருக்கும் ரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் நம்பர் 63வது இருக்கை கிடைத்தது. ஆனால் ரயிலில் ஏறிப் பார்த்தால் அந்த எண்ணில் இருக்கையே இல்லை.
இதுகுறித்து டிக்கெட் பரிசோதகரிடம் ஆறுமுகம் புகார் செய்தார். இதற்கிடையில் 64ம் நம்பர் இருக்கை ஓதுக்கப்பட்ட பயணியும் தனக்கும் சீட் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் டிக்கெட் பரிசோதகர்ம் கடந்த ஒரு மாதமாக இப்படித்தான் இருக்கை இல்லாமல் இயக்கப்படுகிறது என்று அந்நியன் படத்தில் டிடிஆராக வரும் மனோபாலா போல சாவாதானமாக கூறிவிட்டு சென்று விட்டார்.
இதனால் இருக்கை கிடைக்காத பயணிகள் டெல்லியில் இருந்து நெல்லை வரை நின்று கொண்டே 2 நாட்கள் பயணித்தனர்.
பயணிகள் நலனில் அக்கறை செலுத்தும் ரயில்வே நிர்வாகம் இதை போல் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.