இன்டர்போலால் 17 ஆண்டுகள் தேடப்பட்டவர் சென்னையில் கைது
மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த இவரது ஆவணங்களை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இவர் இன்டர்போல் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளில் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை மத்திய உளவுப் பிரிவான ஐ.பியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர் சலீம் அப்பாசி தான் என்பதை உறுதி செய்துவிட்டு இன்டர்போலுக்குத் தகவல் தந்தனர்.
பின்னர் அவர் சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இன்ஸ்பெக்டர் முகிலன், சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
ஆனால் போலீசாரிடம் அப்பாசி தந்துள்ள வாக்குமூலத்தில்,
எனது தந்தை மதானி, அல்ஜீரியா நாட்டில் அரசியல் கட்சி தலைவராக உள்ளார். அங்கு ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடினார். கடந்த 1992ம் ஆண்டு போராட்டத்தின் போது குண்டு வெடித்தது. இந்த வழக்கில் எனது தந்தையை சிறையில் அடைத்தனர்.
எங்கள் குடும்பத்தினர் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாங்கள் அங்கிருந்து ஜெர்மனிக்கு சென்றோம். பின்னர் கத்தார் நாட்டில் அடைக்கலம் சேர்ந்தோம்.
நான் தற்போது சோலார் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான நிறுவனம் நடத்தி வருகிறேன். சோலார் மின்சார தயாரிப்பு குறித்து கர்நாடக அரசுக்கு ஆலோசனை வழங்கவே வந்தேன். நான் தீவிரவாதியோ, குற்றவாளியோ கிடையாது என்றார்.
ஆனால் இவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்பி சாம்ராஜும் விசாரணை நடத்தி பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவரை 23ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.