ஏர் இந்தியா நிர்வாகிகளுக்கு ஜூலை மாத சம்பளம் வெட்டு
மும்பை: ஜூலை மாத சம்பளத்தை விட்டுத் தரும்படி ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. நிர்வாகத்தின் மேல்மட்ட ஊழியர்களுக்கு மட்டுமே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா.
இதனால் ஜூன் மாதத்துக்கான சம்பளம் 15 நாள் தாமதமாக அதன் ஊழியர்களுக்குத் தரப்பட்டது. இப்போது நிதிநெருக்கடியைச் சமாளிக்க ஏர் இந்தியா நிர்வாகம் ஒரு புதிய வேண்டுகோளை விடுத்துள்ளது தனது ஊழியர்களுக்கு.
ஏர் இந்தியா சேர்மன் அர்விந்த் ஜாதவ் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இன்றைய நெருக்கடியான சூழலில் நாம் சேமிக்கும் ஒவ்வொரு பைசாவும் மிகவும் முக்கியமானது. மேல்நிலை ஊழியர்களான நிர்வாக இயக்குநர், பொது மேலாளர்கள், மேலாளர்கள், செயல் இயக்குநர்கள் போன்றோர் வருகிற ஜூலை மாதத்துக்கான சம்பளத்தை மட்டும் நிர்வாகத்துக்கு விட்டுத் தர வேண்டும். இந்த மாதத்தில் சம்பளம், ஊக்கத் தொகை என எதுவும் இவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது..." என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் 150 மேல்நிலை நிர்வாகிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு இரு தினங்களுக்கு முன்புதான் சம்பள உயர்வை அறிவித்திருந்தது மத்திய விமானப் போக்குவரத்துத் துறை. விமானிகளுக்கு சம்பளம் உயர்ந்துள்ள அதே நேரத்தில், நிர்வாகிகளுக்கு ஒரு மாத சம்பளம் கட்டாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவில் மொத்தம் 30,000 பணியாளர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications