இலங்கை அகதிகள் முகாமில் 12 ஆயிரம் தமிழர்களுக்கு சின்னம்மை!
கொழும்பு: இலங்கையில் போர் நடந்த பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் 12 ஆயிரத்து 195 தமிழர்கள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் போர் முடிந்த நிலையில் வடக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த தமிழர்கள் சுமார் 3 லட்சம் பேர் வீடு இழந்து அகதிகளாக முகாம்களில் தவித்து வருகின்றனர்.
ஒருவர் தங்க வேண்டிய இடத்தில் இங்கு 10க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால் அப்பகுதியில் சுகாதார குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இங்குள்ள தமிழர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தினமும் சராசரியாக 30 பேர் வரை அங்கு பலியாகி வருவதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இம்மாதம் 12ம் தேதி வரையில் முகாம்களில் தங்கியிருந்தவர்களில் சுமார் 12 ஆயிரத்து 195 தமிழர்களுக்கு சின்னம்மை நோய் தாக்கியிருப்பதாக தெரிகிறது.
மேலும் இந்த நோய் எளிதாக பரவக் கூடியது என்பதாலும், மக்கள் அருகிலருகில் தங்க வைத்திருக்கப்பட்டிருப்பதாலும் படுவேகமாக பரவி வருகிறது.
ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேருக்கு இந்த நோய் தொற்றி வருவதாக ஐநா மனிதாபிமான அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications