காட்டி கொடுத்ததால் கைதி கழிவு நீரை குடிக்க வைத்து கொடுமை
நெல்லை: செல்போனில் பேசியதை சிறை அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்த கைதியை, சக கைதிகள், கழிவு நீரைக் குடிக்க வைத்து இழிவுபடுத்தியுள்ளனர்.
பாளை மத்திய சிறையில் நேற்று முன்தினம் கமாண்டோ படையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஆயுள் தண்டனை கைதி ரமேஷிடமிருந்து ஒரு செல்போனை பறித்தனர்.
இதையடுத்து செல்லை பறித்த கமண்டோ படையினர் தாக்கப்பட்டனர். இதற்கிடையில் வழிப்பறி வழக்கில் உள்சிறையில் 2ம் பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த கைதி தங்கம் அவ்வப்போது செல்போனில் பேசி வந்தார். இதை சிறை காவலர்கள் கண்டுபிடித்ததை அறிந்த அவர் செல்போனை மணலில் புதைத்து வைத்தார். இதனை காவலர்கள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கைதிகள் தங்கம், மணி, குண்டர் தடுப்பு கைதி மிலிட்டரி குமார், கோபால் உள்ளிட்ட 10 பேர் தாங்கள் உபயோகப்படுத்தி வரும் செல்போனை 7ம் பிளாக்கிலுள்ள குமரி மாவட்டம் புதுக்கடையை சேர்ந்த விசாரணை கைதி ராஜன் என்பவர்தான் காட்டிக் கொடுத்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டனர்.
இதையடுத்து நேற்று மாலை 18 கைதிகளும் ராஜனின் வாயில் துணியை திணித்து கை, கால்களை கயிற்றினால் கட்டி குண்டு கட்டாக 2ம் எண் பிளாக்கிற்கு தூக்கி வந்து சராமரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
பின்னர் அவரது முகத்தில் தண்ணீரை தெளித்து வாயிலிருந்த துணியை எடுத்து அங்கு கழிவு நீர் ஓடையில் இருந்து மலநீர், மற்றும் சிறுநீரை பிடித்து அவரது வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினர். இதனால் வாந்தி எடுத்து ராஜன் மயங்கினார்.
இந்த சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்கு பின்னரே தெரிய வந்த காவலர்கள் ராஜனை மீட்டு நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications