மாவோயிஸ்டுகளுக்கு தடை-தீவிரவாத இயக்கமாக அறிவிப்பு
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் பெரும் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். சிபிஐ (மாவோயிஸ்ட்) என்பது இவர்களது அரசியல் பெயராகும். இருப்பினும் இவர்கள் நக்சலைட்டுகளாகவே செயல்பட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் லால்கர் நகரையும் அதைச் சுற்றியுள்ள 50 கிராமங்களையும் மாவோயிஸ்டுகள் பிடித்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துணை ராணுவப்படையினரின் உதவியுடன் சமீபத்தில்தான் மேற்கு வங்க அரசு கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின்னர் லால்கரையும், சில கிராமங்களையும் மீட்க முடிந்தது.
இந்த நிலையில் மாவோயிஸ்டுளுக்கு மத்திய அரசு தடை விதித்து, அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவோயிஸ்ட் கட்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.
இதன் மூலம் மாவோயிஸ்டுகளைக் கைது செய்ய அரசுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்படும். அவர்களின் அலுவலகங்களும் மூடி சீல் வைக்கப்படும்.
இடதுசாரிகள் எதிர்ப்பு..
மத்திய அரசின் இந்த முடிவுக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிபிஐ எம்.பி. குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், இதை நாங்கள் ஏற்க மாட்டோம். மாவோயிஸ்டுகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்து அவர்களை தடை செய்ததற்குப் பதில், அரசியல் ரீதியாக அவர்களுடன் மோதி வென்றிருக்க வேண்டும் என்றார் அவர்.
சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், இந்தப் பிரச்சினைய அரசியல் ரீதியாகத்தான் தீர்க்க வேண்டுமே தவிர தடையால் ஒரு பயனும் கிடையாது.
பல்வேறு அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரம் மக்களிடம் உள்ளது. இருப்பினும் அரசியல் கொள்கைகள் மூலமாகத்தான் எந்த அமைப்பையும் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை படையினரையும், போலீஸாரையும் வைத்து ஒடுக்க முயலக் கூடாது.
லால்கர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் காண வேண்டுமே தவிர பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் பிரச்சினை தீர்ந்து விடாது என்றார் அவர்.
மேற்கு வங்க அரசு கூட மாவோயிஸ்டுகளுக்குத் தடை விதிக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்த நிலையில் மத்திய அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.