பள்ளிக்கு குண்டு மிரட்டல் விடுத்த மாணவி?-குளித்தலையில் பரபரப்பு
குளித்தலை: குளித்தலையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி முழுவதும் சோதனை நடத்திய போலீசார் பள்ளி மாணவி யாராவது இந்த மிரட்டலை விடுத்திருக்கலாம் என்ற சந்தகேத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை டவுன்ஹால் தெருவில் தனியாருக்கு சொந்தமான மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்று உள்ளது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 8.40 மணிக்கு பள்ளியின் தாளாளர் சங்கர் என்பவரின் வீட்டுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதை எடுத்த வேலைக்கார பெண் மல்லிகாவிடம் எதிர்முனையில் ஒரு பெண் குரல் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது சற்று நேரத்தில் வெடிக்க போவதாகவும் தெரிவித்தது.
இதையடுத்து அவர் தாளாளரிடம் விவரத்தை சொன்னார். அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பள்ளிக்கு வந்த போலீசார் மாணவ, மாணவியர்களை உடனடியாக வெளியேற்றி மைதானத்தில் நிற்க வைத்தனர்.
பின்னர் குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீசார் ஆகியோர் மோப்பநாயின் உதவியுடன் பள்ளி முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
அதே நேரத்தில் இந்த விஷயம் பெற்றோர்களின் காதுகளுக்கு எட்ட, அவர்கள் பள்ளியின் முன் கூட்டமாக கூட திரண்டனர். இதையடுத்து அப்பகுதியில் லேசான பதட்டம் நிலவியது.
இந்நிலையில் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது இளம் பெண்ணின் குரல் என்பதால் பள்ளி மாணவி யாராவது இந்த வேலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மேலும், இன்று பள்ளிக்கு விடுமுறை போட்ட மாணவிகளின் பட்டியலை கேட்டு பெற்றுள்ளனர்.