மகிந்திரா சத்யம்-புதிய சிஇஓ குர்னானி!
மும்பை: சத்யம் நிறுவனம், மஹிந்திரா சத்யம் ஆன பிறகு, அங்கு பெரிய அளவில் மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன. நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக சி.பி.குர்னானி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைமை நிதி அலுவலராக துர்க்கா ஷங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக மகிந்திரா குழுமம் அறிவித்துள்ளது.
இருவரும் உடனடியாக பொறுப்பேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய மோசடிகள் செய்து சத்யம் நிறுவனத்தை இந்த மோசமான நிலைக்குக் கொண்டு வந்த சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவுக்கு விசுவான ஆட்கள் அனைவரும் அந்நிறுவனத்திலிருந்து விலகுகிறார்கள் அல்லது விலக்கப்பட்டு வருகிறார்கள்.
ராமலிங்க ராஜு சிறைக்குப் போன பிறகு, நிறுவனத்தின் இடைக்காலப் பொறுப்பாளராகப் பதவி ஏற்ற ராம் மைனாம்பதி, இப்போது சத்யம் நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் டெக் மஹிந்திரா சத்யம் நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளார்.
அவருக்கு பதில் கேஷவ் பண்டா பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்பு மகிந்திரா அண்ட் மகிந்திராவில் பணியாற்றியவர்.
மற்ற முக்கிய பொறுப்புகள் பலவற்றுக்கும் மகிந்திரா நிறுவன ஊழ்யர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதற்கு முன் சத்யம் நிறுவன சிஇஓவாக இருந்த ஏஸ் மூர்த்தி, இப்போது மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக சிபி குர்னானி பொறுப்பேற்றுள்ளார்.
டெக் மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ரோஹித் காந்தி, இப்போது மஹிந்திரா சத்யம் நிறுவனத்தின் மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆப்ரிக்க பகுதி செயல்பாடுகளின் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகிந்திரா சத்யம் நிறுவன சர்வதேச மார்க்கெட்டிங் தலைமை அதிகாரியாக அசுல் கன்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் ஆதித்ய பிர்லா குழுமத்தில் பணியாற்றினார்.
மகிந்திரா சத்யம் தலைவர் பதவிக்கு வருவது யார் என்பது மட்டும் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.